Friday, December 17, 2010

விடாக்கண்டனும் கொடாக்கண்டனும்.....


அப்பாடா.....

நாட்டில் பணப்புழக்கம் அதிகமாகிவிட்டது என்று நம் ரிசர்வ் வங்கி கவலைப்பட்டது யாருக்கு கேட்டதோ இல்லையோ, நமது மேலாண்மையான அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே கேட்டது போலும். 

அதனால்தான் இந்த அதிகமான பணத்தை எவ்வாறு செலவழிப்பது என்று அவர்கள் தாவாங்கட்டையை சொறிந்துகொண்டே யோசித்ததில் கிடைத்தது.... ராஜாவின் ராஜ ஊழல்.

அப்படி  இப்படி என்று இரண்டு கட்சியினரும் அடித்த கூத்தில், அரசிற்கு சுமார் 150 கோடி செலவு. 

"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா" என்று கவுண்டரின் டயலாக் பேசும் நல்லவர்களே... இந்த பணம் நாம் வரி கட்டிய பணம் என்பதை மறக்கிறீர்கள்.

இன்று பாராளுமன்ற கூட்டுக் குழு கேட்டு கூட்டத்தொடரை நடத்த விடாமல் செய்யும் இதே பிஜேபி, அவர்கள் அரசாளும்போது உண்டான "தெஹெல்கா" விவகாரத்தில், காங்கிரஸ் கேட்டுக்கொண்டபடி பாராளுமன்ற கூட்டுக் குழு அமைக்கமாட்டோம் என்றது அனைவருக்கும் நினைவிருக்கும். வரலாற்று சக்கரம் சுழன்று, இன்று கேட்குமிடத்தில் பிஜேபி, தடுக்குமிடத்தில் காங்கிரஸ். எம்பிக்களின் சம்பள உயர்வு விஷயத்தில் காண்பித்த ஒற்றுமையை இதில் காணவில்லை.

ஆனால் இந்த இரண்டில் என்ன ஒற்றுமை என்று பார்த்தால், வீணாகப் போனது நம்முடைய வரிப்பணம் தான். நமக்கு மட்டும் வரலாற்று சக்கரம் ஏன் சுழல மாட்டேன் என்கிறது என்று தெரியவில்லை.

பல மசோதாக்கள் நிறைவேறாமல் போயிருக்கிறது. யாருக்கும் கவலையில்லை, யாருக்கும் வெட்கமில்லை.

ஒரு  சில விஷயங்கள் என் மண்டைக்கு மட்டும் ஏனோ புரியவில்லை. 
  1. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு விசாரணையை மீண்டும் ஏன் கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும்? இது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா?
  2. இதுவரையில் எத்தனை கூட்டுக் குழு விசாரணை முடிந்திருக்கின்றது?
  3. ஆளுங்கட்சியினர் அமைக்கும் கூட்டுக் குழுவில் எதிர்கட்சியினர் மட்டுமே மாட்டிகொள்வார்கள் என்ற பயமா?
"எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, நம் நாட்டிலே" என்கின்ற மலைக்கள்ளன் பாடல் நினைவுக்கு வருகிறது.

போட்டியிடுவோர் அனைவரும் கெட்டவர்களாக இருந்தால் யாருக்கு வாக்களிப்பது என்று தானே கேட்கிறீர்கள்?

ஒட்டு போடாதீர்கள்..... "ஓ" போடுங்கள் (49O)!!!!!

மனம் இருந்தால் மார்க்கமுண்டு மக்களே.....

Saturday, December 11, 2010

மலம் தின்னி கழுகுகள்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 1961ஆம் வருடம் "அனைவருக்கும் வீடு" என்கிற நோக்கில் தொடங்கப்பட்டது.

இதன் விதிகள்படி பொதுமக்களுக்கு 85% (குலுக்கல் முறையிலும்) மீதமுள்ள 15% அரசின் விருப்ப உரிமைப்படி ஒதுக்கப்படுகிறது.

தனியாக வசிக்கும் திருமணமாகாத பெண், உடல் ஊனமுற்றவர், ராணுவத்தினர், முதியோர், தியாகிகள், விளையாட்டு வீரர்கள், சமூக சேவகர்கள், அப்பழுக்கற்ற சேவை புரிந்த மாநில அரசு ஊழியர்கள் என்பன போன்ற பதினைந்து பிரிவுகளில் வீடுகள் வழங்கப்பட்டு வந்தன.

மேற்சொன்ன கடைசி இரண்டு பிரிவுகளில்தான் மிகப்பெரிய விதிமீறல்கள் நடந்து வந்துள்ளன.

2001 முதல் ஒதுக்கப்பட்ட மனைகளில் / வீடுகளில், சமூக சேவகர்கள் என்கின்ற பிரிவில் மட்டும் இருநூறு பேருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அடடே நம்மிடையே இவ்வளவு சமூக சேவகர்கள் வாழ்கிறார்களா? என்று நீங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டாம். அவர்கள் அனைவரும் அரசியல்வாதிகளின் சொந்தங்கள், முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள், மற்றும் முதல்வரின் மனைவி, துணைவி, மற்றும் இணைவி க்கு தெரிந்தவர்கள்.

நாளொன்றுக்கு பன்னிரண்டு மணி நேரம் சிரமம் பாராமல் உழைத்து, சம்பாதித்து, பத்து மணி நேரம் வரிசையில் நின்று, விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து, நானூறு ருபாய் பணம் கட்டி, நமக்கும் ஒரு வீடு ஒதுக்கப்படும் என்ற நினைப்போடு காத்திருக்கும் சாதாரண குடிமகனுக்கு கிடைத்தது என்ன? வெறும் ஏமாற்றம் மட்டுமே. அவனது வீடு வாங்கும் கனவு, கனவாக மட்டுமே ஆகிப்போனது ஒரு மிகப்பெரிய கொடுமையான உண்மை.

இந்த காலகட்டத்தில் சரியான மற்றும் நியாயமான விலையில் வீடு வழங்கக்கூடிய ஒரு வாரியமானது இப்பேர்பட்ட ஒரு விதிமீறலை செய்வது என்பது மிகவும் வருந்தத்தக்க ஒரு விஷயம். 

இப்படிப்பட்ட  சமூக சேவகர்களை!!!??? நான் கேட்க விரும்புவது சில கேள்விகள் மட்டுமே....
  1. உங்களுக்கு எல்லாம் என்ன கேடு வந்தது? பொதுமக்களின் பணத்தை ஊழல் என்கின்ற போர்வையில் சூறையாடியது போதாது என்று மக்களுக்கு நியாயமாக சேர வேண்டிய பொருளையும் சூறையாடியது என்ன விதத்தில் நியாயம்?
  2. பணத்திற்கு கொஞ்சம் கூட குறைவில்லாத உங்களுக்கு எங்கள் வயிற்றில் அடிக்கவேண்டிய கட்டாயம் என்ன? எங்கள் பிணங்களை தின்றது போதாது என்று எங்கள் மல***ம் தின்ன வேண்டுமா?
இதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய வீட்டு வசதித்துறை அமைச்சர், எமாற்றியவர்களுக்கு ம******** அள்ளி ஊட்டி விட்டுக்கொண்டிருக்கிறார். தானோ அல்லது தன் துறையோ எந்த விதமான தவறும் செய்யவில்லை என்று சொல்லிக்கொண்டு திரிகிறார். சமூக சேவகர்கள் என்கின்ற ஒரு சான்றிதழ் மட்டுமே தேவை, அது யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று கூறுகிறார். அப்படியானால், எனக்கு என் தம்பியோ அல்லது அண்டை வீட்டுக்காரரோ கூட சான்றிதழ் கொடுக்கலாம் போல இருக்கிறது.

ஆனால் இதனை எதிர்த்து போராடவேண்டிய நம் தமிழ் மக்களோ, நாக்கை தொங்க போட்டுக்கொண்டு இலவசங்களை வாங்கி வீட்டில் வைத்துக்கொண்டு, கண்டும் காணாமல் இருந்து கொண்டிருக்கின்றது.

அதுதானே, தமிழர்கள் ஆயிரமாயிரமாய் கொல்லப்படுவதை அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்த ஜென்மங்கள் தானே நாம். ரஜினி படத்திற்கு கூடிய கூட்டம் கூட ராஜபக்சே வை விரட்ட வரவில்லையே. இங்கிலாந்தில் மூன்று லட்சம் தமிழர்களால் செய்ய முடிந்ததை ஆறு கோடி தமிழர்களால் ஏன் செய்ய முடியவில்லை?

இந்த ஊழலை வெளிக்கொணர்வோம் என்று ஒரு எதிர்கட்சி கூட்டம் வரும். அவர்களை நம்பி நாம் அவர்களை ஆட்சியில் அமர வைப்போம். அவர்களும் நாளை இதே கூத்தை திரும்ப செய்வார்கள். (அதிமுக கட்சியினருக்கு எத்தனை வீடுகள் ஒதுக்கப்பட்டது என்று கருணாநிதி வெளியிட்ட அறிக்கை ஒரு பெரிய காமெடி). ஒருவர் மாற்றி ஒருவர் சம்பாதித்துக்கொண்டு இருக்கிறார். இதை கேட்கவேண்டிய நாம் அன்றாட தேவைகளைக்  கூட  போராடி பெற்றுக்கொள்ளவேண்டிய நிலைமையில் இருக்கிறோம்.

அன்றே  கொல்லவேண்டிய அரசன் கொல்லப்படவேண்டியவனாக இருக்கிறான்...
நின்று கொல்லவேண்டிய தெய்வம், நின்று கொண்டு மட்டும்தான் இருக்கின்றது.

வாழ்க  ஜனபணநாயகம்.....

பி.கு 
நான் மேலே சொன்ன கேட்ட வார்த்தைகளுக்கு மேல் வேறு ஏதாவது சிறப்பான வார்த்தைகள் இருந்தால், வாசகர்கள் அதனை சேர்த்துக்கொண்டு படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

Wednesday, October 27, 2010

கலைஞரின் "செய்ய மறந்த கதை"



ஐயா கலைஞர் அவர்களுக்கு,

வணக்கம். 
என்னை உங்களுக்கு தெரியாது. ஆனால் உங்களை எனக்கு நன்றாக தெரியும். 

கடந்த  சில நாட்களாகவே  தாங்கள் தூக்கம், பசி, சந்தோசம் இல்லாமல் அலைவதாக அறிந்தேன். இவை அனைத்தும் உங்களுக்கு பிள்ளைகள் பிறந்தவுடனயே காணாமல் போய்விட்டது என்பது திராவிடர்கள் அனைவருக்கும் நன்றாக தெரிந்த ஒரு விஷயம். நான் அதைப் பற்றி சொல்லவில்லை. தங்கள் அரசியல் வாழ்க்கையை பற்றி சொன்னேன்.

"மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும்" என்ற பழமொழிக்கு ஏற்றாற்போல், இப்போது நீங்கள் அலைந்து கொண்டிருக்கிறீர்கள். இப்போது நீங்கள் யோசிப்பது போல் ஐந்து வருடங்களுக்கு முன்னர் யோசித்திருந்தால் (மக்களுக்கு என்ன நன்மைகள் செய்யலாம் என்று...) இந்த அலைச்சல் மற்ற கட்சிகளுக்கு இருந்திருக்கும்.

நீங்கள் ஆட்சி செய்த இந்த ஐந்து வருடங்கள், உங்கள்  வீட்டு பஞ்சாயத்தை பார்பதற்கே சரியாக இருந்தது. எந்த பிள்ளைக்கு என்ன செய்யலாம் என்று மட்டுமே யோசித்தீர்கள். இதனை நீங்களோ அல்லது உங்கள் மக்களோ யாரும் மறுத்து பேச முடியாது. மக்கள் அனைவரும் கண்கூடாக கண்ட ஒரு உண்மை இது. 

அண்ணா தொடங்கிய திராவிட கட்சியானது இப்போது குடும்ப கட்சியாகிப் போனது. கட்சியில் அடிமட்டத்தில் இறங்கி வேலை பார்த்த உண்மையான தொண்டர்கள் அனைவருக்கு கடைசியில் கிடைத்தது என்ன? இலவச தொலைக்காட்சி, இலவச அடுப்பு மற்றும் இலவச வேட்டி சேலை. ஆனால், செல்வச்செழிப்பில் வளர்ந்த தங்கள் குடும்பத்திற்கு கிடைத்ததோ கட்சியின் அனைத்து பதவிகளும். இதில் விதிவிலக்கான  ஸ்டாலின் மட்டுமே உழைத்து, முன்னேறி உயர் பதவிகளுக்கு வந்தார். இதில் யாருக்கும் மாற்று கருது இல்லை என்றே சொல்லலாம்.

தங்கள் குடும்பத்தினர் அனைவரும் கோடிக்கணக்கில் சம்பாதித்து இருக்கிறார்கள். இன்னும் அவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? இருக்கின்ற இந்த செல்வங்கள் போதாதா?

இரவு பகல் பார்க்காமல் வேலை செய்து, வியர்வை சிந்தி சம்பாதித்த பணத்திலிருந்து வரி கட்டி, மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கே போராடி பெறவேண்டிய சூழ்நிலைக்கு உங்களால் தள்ளப்பட்ட என்னை போன்ற பல்லாயிரக்கணக்கான குடிமகன்களுக்கு நீங்கள் செய்தது என்ன?

என்னது இலவசங்களை வாரி வழங்கினீர்களா?

யாருக்கு ஐயா வேண்டும் இலவசம்? 

ஆங்கிலத்தில் ஒரு பழமொழியின் தமிழாக்கம்....

"பசிக்கின்ற ஒருவனுக்கு மீன் கொடு,
அவனின்  ஒரு வேளைக்கு  பசி தீரும்.
அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடு,
அவனுக்கு வாழ்நாள் முழுவதற்கும் பசி தீரும்"

இலவசங்கள், மக்களை சோம்பேறிகளாக ஆக்கியதை தவிர வேறு என்ன செய்தன. நீங்கள் மிகவும் நம்பிய இந்த இலவசங்கள் இப்போது உங்களுக்கே மிகுந்த தலைவலியாக வந்திருப்பதை கவனித்தீர்களா? அதற்கு பதிலாக வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தியிருந்தால் அனைவருக்கும் நன்மையாய் இருந்திருக்குமே. நாங்களே இவை அனைத்தையும் வாங்கியிருப்போமே.

மேலும் சொந்தமாக எதையும் செய்யாமல், மத்திய அரசின் திட்டங்களை தமிழ்ப்படுத்தி தமிழ்நாட்டில் உலவ விட்டீர்கள் (108, JNURM.. etc). அதுவே வினையாகி விட்டது.

வட மாவட்டங்கள் அனைத்தையும் ஸ்டாலின் வசம், தென் மாவட்டங்கள் அனைத்தும் அழகிரி வசம் என்று பிரித்து கொடுத்து இருக்கிறீர்களே, தமிழ் நாடு என்ன உங்கள் குடும்ப சொத்தா? நீங்கள் சொன்னதுபோல், அரசியலுக்கு நீங்கள் வரும்போது கொண்டு வந்த மஞ்சள் பையை மட்டுமே பிரித்து கொடுக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது. நினைவில் இருக்கட்டும்.


400 கோடிக்கு மேல் செலவு செய்து தாங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காகவும், உங்களை புகழும் அடிவருடிகளுக்காகவும் நடத்திய தமிழ் செம்மொழி மாநாட்டால் யாருக்கு என்ன பயன். இது வரையில் புதிய தமிழ்ச்சொற்கள் உருவாக ஏதாவது செய்தீர்களா? முத்தமிழ் அறிஞர் என்று உங்களுக்கு பட்டம் சரிதானா?


தொட்டதெற்கெல்லாம் பாராட்டு விழா நடத்தி என்ன பயன்? உங்கள் பணத்திலா நலத்திட்டங்கள் செய்தீர்கள்? அவ்வளவும் எங்கள் பணம் ஐயா. எங்களிடம் பணம் வாங்கி (வரியாக) எங்களுக்கு செய்வதற்கு உங்களுக்கு ஏன் பாராட்டு விழா? கூத்தாடிகளின் பாராட்டு நிலையானது அல்ல. அன்று அம்மையாரை புகழ்ந்ததும் இதே வாய்கள்தான். மக்களைத் தவிர மற்ற அனைவரிடமும் பாராட்டு பெற்று விட்டீர்கள்.


கட்சி  பேதம் பார்க்காமல் உங்கள் கட்சியினரும், குடும்பத்தினரும் இயற்கை வளங்களை சூறையாடி (மணல் கொள்ளை, விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக்கியது என்பது போன்ற பல..) பணம் பண்ணினரே? இதற்கு உங்கள் பதில்? அடுத்த தலைமுறையினருக்கு நாங்கள் என்ன பதில் சொல்வோம்? தமிழ்நாட்டில் மொத்தம் ஆறு கோடி மக்கள் வசிக்கிறார்கள் ஐயா, உங்கள் குடும்பம் மட்டும் அல்ல. 

உங்கள்  ஆட்சி செய்ய மறந்தது பல உள்ளது. ஒரு சில உங்கள் பார்வைக்கு...


  1. பூரண  மதிவிலக்கு மற்றும் புகையிலை பொருட்களை தடை செய்வது
  2. ஏரி, கால்வாய்கள் மற்றும் ஆறுகளில் தூர்வாறுதல்
  3. மரபு சாரா மின்சார உற்பத்தி (சூரிய சக்தி, குப்பைகளில் இருந்து மின்சாரம்)
  4. மரபு சாரா எரிசக்தி (உணவுக்கழிவுகளில் இருந்து சமையல் எரிவாயு)
  5. நோய்வாய்ப் பட்டிருக்கும் போக்குவரத்துத் துறையின் புனரமைப்பு
  6. அனைத்து அரசுப் பள்ளிகளின் சீரமைப்பு
  7. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல்
  8. பிரேசில் நாட்டில் உள்ளது போல் "food for trash program" மூலம் குப்பைகளை மறு சுழற்சி செய்யலாம்
  9. விவசாய தொழிலின் புனரமைப்பு
  10. சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாடு
  11. அரசு மருத்துவமனைகளை சீரமைத்தல்
  12. வாகன கட்டணங்களை முறைப்படுத்துதல்
  13. அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து, மின்சார மற்றும் மருத்துவமனை வசதிகள்
பிள்ளைக்காக அரசு கேபிள் தொடங்கியதில் காண்பித்த அவசரத்தை மக்கள் பிரச்சினைகளுக்கும் சற்று காண்பித்திருக்கலாம். மேற்கண்டவற்றுள் சிலவற்றையாவது செய்திருந்தால் இந்நேரம் நீங்கள் நிம்மதியாக இருந்திருக்கலாம். 


என்ன செய்வது. காலம் கடந்த விட்டது. வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...


மக்களுக்கு:
 
கலைஞர் செய்ய மறந்த கதையை  நீங்கள் மறக்காமல் இருக்க வேண்டும். அதிகபட்சம் தேர்தல் வரும் வரையிலாவது....

Tuesday, October 26, 2010

அடிகளார் குடும்பமும் அரசியலும்....



சென்ற வார ஜூனியர் விகடனில் வந்த ஒரு செய்தி என்னை மிகவும் பாதித்தது.

மேல்மருவத்தூர் அடிகளாரின் மகன் திரு. அன்பழகன் அரசியலில் நுழையப் போவதாக வந்த செய்திதான் அது.
இவர் எதற்காக அரசியலுக்கு வருகிறார்? மக்களுக்கு நன்மை செய்யவா? இல்லை தாங்கள் வசிக்கும் பகுதியின் முன்னேற்றம் கருதியா?

இப்படி  ஏதாவது தவறாக எதிர்பார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. 

சென்ற  மாதங்களில் அடிகளாரின் அரசாங்கத்துக்கு ஆப்பு வைத்தனர் அரசு அதிகாரிகள். இவை, அடிகளாரின் குடும்பத்தை மிகவும் யோசிக்க வைத்தது என்றும், தங்களுக்கு அரசியல் பலம் இருந்தால் இவை அனைத்தையும் சமாளிக்கலாம் என்பதற்காக இந்த அரசியல் பிரவேசம்.

எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்தே இந்த மாதிரி சாமியார்களை நான் நம்புவதில்லை. கடவுள் பெயரால் இவர்கள் அடிக்கும் கொட்டங்களை சகிக்க முடிவதில்லை.

மேற்கண்ட எனது நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது ஒரு நிகழ்ச்சி. இரண்டு மாதங்களுக்கு முன்னர் விழுப்புரம் வந்திருந்தார் அடிகளார். அவரை தரிசிக்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்பொழுது அங்கே சிலர் பணம் வசூல் செய்துகொண்டு இருந்தனர். என்னவென்று கேட்டால், அடிகளாருக்கு பாத பூஜை செய்ய ரூ. 2,500.00, தொட்டு கும்பிட ரூ. 1,000.00, அடிகளார் உங்கள் வீட்டுக்கு வரவேண்டுமென்றால் ரூ. 25,000.00. 

என்ன கொடுமை சார் இது. கடவுள் பக்தர்களுக்கு அருள் பாலிக்க பணம் வசூல் செய்கிறாரா அல்லது அருள் இங்கே விற்பனைக்கு உள்ளதா? அப்போ யாரிடம் பணம் இருக்கின்றதோ அவர்களுக்கு தான் கடவுள் அருள் கிடைக்குமா? அடுத்த வேலைக்கு உணவில்லாமல், தங்கள் கஷ்டம் தீரும் என்ற நம்பிக்கையில் கடவுளை தரிசிக்க வரும் அன்றாடம்காய்ச்சிகளுக்கு என்ன பதில்?  

வருமான வரி அதிகாரிகளின் சோதனையில் கிடைத்தது கொஞ்சமல்ல. ருபாய் 13 கோடிக்கும் மேல் என்கின்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. படுக்கையறையில் மட்டும் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் ருபாய் 9 கோடி. இவையெல்லாம் யாருடைய பணம்? இவர்கள் உழைப்பால் வந்த பணமா? இல்லை "கடவுள் அருள்" மற்றும் "கல்வி" யை விற்றதனால் வந்த பணமா? பதிலுக்காக காத்திருக்கிறோம்....

நான் மட்டும் இவ்வாறு சொல்லவில்லை. மருவத்தூர் அருகில் உள்ள "அச்சிறுபாக்கம்" மற்றும் "சோத்துப்பாக்கம்" கிராமங்களில் உள்ள தேநீர் கடைகளில் சிறிது நேரம் அமர்ந்து இருந்தால், இவை அனைத்தும் (அல்லது இதற்கு மேலும்) சொல்கிறார்கள். அங்கே இவர்கள் நடத்துவது ஒரு தனி அரசாங்கம் என்றே சொல்லலாம்.

இதெல்லாம் அவர்களுக்குவந்த சொதனைகளாம். இவ்வாறு இனிமேல் வராமல் இருக்க ஒரு அரசியல் பலம் தேவைப்பட்டதால் இந்த அரசியல் பிரவேச முடிவாம்.


தங்கள் செல்வாக்கை (பணத்தை சொன்னேன் சார்) பயன்படுத்தி இவர்கள் தேர்தலில் ஜெயித்தால், இவர்கள் நல்லவர்களாகி விடுவார்கள், இவர்கள் கொள்ளையடித்த பணம் அனைத்தும் இவர்களுடையதாகி விடும். பின்னர் தங்கள் அரசியல் பலத்தை வைத்து இதற்க்கு மேலும் கொள்ளையடிப்பார்கள்.


ஆனால் நாமோ, "இவங்களெல்லாம் திருந்தவே மாட்டாங்க சார்" என்று சொல்லிக்கொண்டு நம் வேலையை பார்க்க கிளம்பி விடுவோம். வேறு ஏதாவது ஒரு ஊரில் ஒரு சாமியார் முளைப்பார். அவரும் கொள்ளையடிப்பார். 

தாயே ஆதிபராசக்தி (நான் அடிகளாரை சொல்லவில்லை மக்களே)

தெய்வம் நின்று கொள்ளும் என்று சொல்வார்கள். நீ கோவிலில் நின்றுகொண்டுதான் இருக்கிறாயே தவிர, தண்டிக்க மாட்டேன் என்கிறாயே. உன் காலடியில் இதனை அக்கிரமும் நடக்கின்றது. 


முடிவாக மக்களுக்கு ஒரு கேள்வி....


"கடவுள் பெயரால் ஏமாற்று வேலைகளை  நடத்தும் போலிப் பூசாரிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுளின் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா? 

அல்லது  இவர்களை நல்லவர்கள் என்று நம்பிக்கொண்டு பின்தொடரும் மக்களின் குற்றமா?
 

உதாரணம்  வேண்டுமா? இதோ...

  • பிரேமானந்தா
  • கொலைகார சங்கராச்சாரியார் கும்பல்
  • நித்யானந்தா
நம் Philosophy Prabhakaran சொன்னது போல் ...


என்றைக்கும் சாமியார்களில் இரண்டே வகைதான்... நல்ல சாமியார், போலி சாமியார் என்கிறீர்களா...? இல்லை... சாமியார் என்றாலே போலி தான்... பின்னே என்ன இரண்டு வகை...?
1. போலீசில் மாட்டிய சாமியார்
2. போலீசில் மாட்டாத சாமியார்


சிந்தியுங்கள் மக்களே!!!

Friday, October 22, 2010

மானாட மயிலாட - மனித சர்க்கஸ்


இந்த மாதிரி நிகழ்ச்சிகளை பார்ப்பதை அடியோடு வெறுப்பவன் நான். ஆட்டம் பாட்டம் என்கிற போர்வையில் இவர்கள் அடிக்கும் கூத்து அளவிடமுடியாது. 

நாளாக  நாளாக இந்த மாதிரி நிகழ்ச்சிகள் தாங்கள் என்ன நினைத்து தொடங்கினார்களோ அதனை முழுவதும் மறந்துவிட்டு, மற்ற தொலைக்காட்சிகளுக்கு போட்டியாக, அவர்களை விஞ்ச, வித்தியாசம் என்கின்ற போர்வையில், கண்மூடித்தனமாக போட்டிகளை நடத்துகின்றனர்.


ஒரு நடன நிகழ்ச்சியில் என்ன இருக்கவேண்டும்? நடனம்தானே? ஆனால் நான் பார்த்ததோ வேறு மாதிரி இருந்தது.


கம்பி மீது நடக்கிறார்கள்,
ஒருவரின் உடல் மீது இன்னொருவர் ஏறி நிற்கிறார்,
இருவரும்  சேர்ந்து குட்டிக்கரணம் அடிக்கிறார்கள்,
செங்குத்தான ஒரு சுவரில் உள்ள கம்பிகளில் வளைந்து நெளிந்து ஆடுகிறார்கள்.


பார்கின்ற எனக்கே என்னடா இது என்று இருந்தது.


நான் ஒன்றும் புதுமைகளை வெறுப்பவன் இல்லை. உலக வழக்கப்படி நடனம் என்பது ஒரு மேடையில் மனிதர்கள் மட்டுமே தங்கள் உடலசைவில் செய்வது. ஆனால் இங்கே நடப்பவற்றை காணும்போது, நடன இலக்கணங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நிகழ்ச்சியை எப்படி நடன நிகழ்ச்சியாக எடுத்துக்கொள்கிறார்கள் என்றே தெரியவில்லை. இதற்கு நடுவர்களாக இரண்டு "நடன இயக்குனர்கள்" வேறு.


போட்டியாளர்கள் தாங்கள் வெற்றி பெற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.அவர்களை வழிப்படுத்துவது நடுவர்களின் கடமை அல்லவா? அனால் இவர்களோ, வழி தவறுதல்களை பாராட்டி சொல்ல சொல்ல, போட்டியாளர்களும் வழி தவறி செல்கிறார்கள்.


எப்படி  இந்த நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று நான் இவர்களுக்கு சொல்ல வரவில்லை. அவர்களுக்கு இது நன்றாகவே தெரியும் என்று நினைக்கிறேன்.


ஆளுங்கட்சியின்  தொலைகாட்சி என்றதும் என்ன வேண்டுமானாலும் செய்வதா? இவைகளை செய்தால் டி.ஆர்.பீ ரேட்டிங்கில் வேண்டுமானாலும் முன்னேற்றம் வரலாம். உலகம் முழுவதும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் இப்படிப்பட்ட தவறுகள் நேர்ந்தால், கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்காமல் போய்விடும். சற்று தொலைநோக்கில் சிந்தித்து செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும். செய்வார்களா???


Tuesday, October 5, 2010

தூசி தட்டி எடுக்கப்பட்ட காமராஜர் பெயர்

செய்தி  : 
காமராஜர் நினைவு நாளில், அதிமுகவினர் காமராஜரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். 


இந்த வருடம் திடீரென அதிமுக விற்கு எப்படி காமராஜர் நினைவில் வந்தார் என்பதற்கு  ஒரு கற்பனை உரையாடல்...

-------------
இடம் : கொடநாடு
நாள் : அக்டோபர் 1, 2010

ட்ரிங்.....ட்ரிங்......

காரியதரிசி : ஹலோ,யாரு பேசுறது?

மறுமுனை : நாங்க தலைமை கழகத்திலிருந்து பேசுறோம். அம்மா இருக்காங்களா?

காரியதரிசி : இருக்காங்க. இருங்க கொடுக்கிறேன்.

அம்மா : சொல்லுங்க. என்ன விஷயம்?

மறுமுனை : திமுக, காங்கிரஸ் எல்லோரும் எதேதுக்கோ கூட்டம் கூட்டமா போய் மக்கள் பார்க்கிற மாதிரி ஏதாவது செஞ்சிகிட்டே இருக்காங்க  அம்மா. நாங்க என்ன செய்யுறதுன்னு தெரியல. ஏதாவது சொல்லுங்கம்மா. நாம ஏதாவது செய்யலேன்னா மக்கள் நம்மள மறந்திடுவாங்க.

அம்மா : அமாம், நான் கூட அத பத்திதான் யோசிச்சிகிட்டே இருந்தேன். ஒரு நிமிஷம் இருங்க....ம்ம்ம்.... இப்போ யாருடையதாவது பிறந்த நாளாவது வருதா பாருங்க.

மறுமுனை : ஆமாம்மா. நாளைக்கு தேசத்தந்தை காந்தியின் பிறந்த நாள் வருது. நாம ஏதாவது செஞ்சு கூட்டத்தை கூட்டலாமா அம்மா?

அம்மா : வேணாம். அவரின் பிறந்த நாளை கொண்டாடினால் நமக்கு என்ன லாபம்? அவரை மக்கள் இப்போ நினைக்கிறது வருஷத்துல ரெண்டே நாள் தான். அவரை விட்டுடுங்க. அதெல்லாம் சரிப்படாது. வேற ஏதாவது செய்யலாம்...

மறுமுனை : எங்களுக்கும் எதுவும் தோணலை அம்மா.

அம்மா : இப்படி சொல்ல உங்களுக்கு வெக்கமா இல்லை?

மறுமுனை : என்னம்மா பண்றது. இத்தனை வருஷமா, நீங்க இல்லன்னா சின்னம்மா மட்டும்தான் யோசிச்சீங்க. அதனால சட்டுன்னு மூளை வேலை செய்ய மாட்டேங்குதும்மா. மன்னிச்சிருங்க.
 
அம்மா : சரி. ஒரு நிமிஷம் இருங்க....
(காரியதரிசியை அழைத்து எதோ கேட்கிறார். பின்னர் தொலைபேசியில்.....)

காமராஜரோட நினைவு நாள் நாளைக்கு. அவரோட சமாதிக்கு கூட்டமா போய் மலர் வளையம் வச்சிட்டு வாங்க.

மறுமுனை : யாரும்மா அந்த காமராஜர்?

அம்மா : இந்த காங்கிரஸ்காரங்க சொல்லிக்கிட்டே இருப்பாங்களே, காமராஜர் ஆட்சி!! காமராஜர் ஆட்சின்னு, அதுல வர்றவர் தான். 

மறுமுனை : அவர் அப்படி என்னம்மா செய்தார்? ஒன்னும் தெரியலையே?

அம்மா : அதை பத்தியெல்லாம் நாம  கவலைப்பட வேண்டாம். அவரு என்ன செஞ்சார் எப்படி வாழ்ந்தார் என்பதை பத்தி காங்கிரஸ்காரங்களே கவலைப்படுறதில்லே. நாம எதுக்கு யோசிக்கணும். அவர் வகிச்ச முதலமைச்சர் பதவி மட்டும்  நமக்கு போதும். அவரோட கொள்கைகள் எல்லாம்  நாம நடத்துற அரசியலுக்கு சரிப்பட்டு  வராது. விட்டுடுங்க.

மறுமுனை : கடந்த 35 வருஷமா நாம அப்படி செஞ்சதில்லையே அம்மா. நாம ஆட்சியில இருந்தப்ப கூட அமைச்சர்கள் தான் அவரின் விழாவுக்கு போனாங்க. நீங்க எதுக்கும் போகலியே அம்மா. மக்கள் கோவிச்சிக்க மாட்டாங்களா அம்மா?

அம்மா : (பலத்த சிரிப்பொலி) மக்களை பத்தியெல்லாம் நீங்க எதுக்கு கவலைப்படுறீங்க. மக்களுக்கு அந்த அளவுக்கு ஞாபகசக்தி இருந்திருந்தா நாம யாரும் தேர்தல்ல ஜெயிச்சிருக்கவே முடியாது. தேர்தல்ல ஜெயிக்க அவருடைய பேரை நாம உபயோகப்படுத்தியாக வேண்டும். புரியுதா?

மறுமுனை : புரியுதும்மா. ஆனா அது நமக்கு எப்படி சாதகமாகும்ன்னு தான் புரியல.

அம்மா : சொல்றத நல்ல கவனமா கேளுங்க. அதிமுக கோட்டையா இருந்த தென் மாவட்டங்கள்ள, போன தடவை நடந்த நாடாளுமன்ற தேர்தல்ல நாம ஒரு தொகுதியில கூட ஜெயிக்கல. ஏன்னு சர்வே எடுத்து பாத்தப்ப, நம்ம கட்சி தேவர் கட்சிங்கிற முத்திரை இருக்கு. நாடார்களும் தலித்துகளும் அதிகமா உள்ள தொகுதி அது. 

மறுமுனை  : நாடார்களுக்கு நாம என்னம்மா பண்ணோம்?

அம்மா : வெங்கடேச பண்ணையார நாம தானே வீடு புகுந்து போட்டு தள்ளினோம். அத கருணாநிதி நல்ல பயன்படுத்தி பண்ணையாரின்  மனைவிக்கு (ராதிகா செல்வி)  எம்.பி பதவியை  கொடுத்து அமைச்சராக்கி நாடார் ஒட்டு எல்லாத்தையும் தன் பக்கம் இழுத்துக்கிட்டாரு.

ஆனா இப்போ, சட்டம் ஒழுங்கு பிரச்னையில வியாபாரிங்க எல்லோரும் ஆளுங்கட்சி மேல ரொம்ப அதிருப்தியா இருக்காங்க. இந்த சமயத்தில் நாடாரான காமராஜரின் பேரை உபயோகப்படுத்தினோம்னு வைங்க, நல்லா கல்லா கட்டலாம். புரியுதா?

மறுமுனை : நல்லா புரியுது அம்மா. நீங்க சொன்னபடியே செஞ்சிடுறோம். 

அம்மா : ஒரு வேகத்துல போய் யாருக்கும் பேட்டி குடுத்துராதீங்க. காமராஜரை பத்தி கேட்டாங்கன்ன மாட்டிக்குவீங்க. புரியுதா?

மறுமுனை : சரிம்மா. நீங்க சொன்ன மாதிரியே செய்யுறோம். 
(கோஷம் : அம்மா வாழ்க!!!!)

Sunday, October 3, 2010

எந்திரன் - திரை விமர்சனம்

முன்னதாக, எனக்கு இந்த திரைப்படத்தை காண வாய்ப்பு  ஏற்படுத்திக்கொடுத்த  தம்பி திரு. தினேஷ் பாபு அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.



விமர்சனம்:

தமிழ் திரை உலகில் ஒரு மிகப்பெரிய சாதனை....

நன்றி சொல்லப்பட வேண்டியவர்கள்
  1. அமரர் திரு சுஜாதா அவர்கள் - நீங்கள் இல்லையென்றால் இப்படிப்பட்ட ஒரு திரைக் காவியத்தை நாங்கள் நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது. எந்த ஒரு அறிவியல் சித்தாந்தத்தையும் எல்லா மக்களுக்கும் புரிகிற வகையில் உங்களை தவிர வேறு யாராலும் கொடுக்க முடியாது. அதனை இந்த படத்தில் உலகிற்கு நிரூபித்து இருக்கிறீர்கள். உங்கள் தீர்க்க தரிசனம் என்றுமே பொய்த்ததில்லை. அதற்கு இதுவும் ஒரு சான்று.
  2. இயக்குனர் சங்கர் - நீங்கள் மிகவும் செலவு செய்கிறீர்கள் என்று நான் இன்று வரை நினைத்ததுண்டு. ஆனால் இப்படிப்பட்ட ஒரு கதைக்கு, நீங்கள் நினைத்த உரு வரவேண்டும் என்பதற்காக மெனக்கேட்டது நன்றாக தெரிகிறது. மேலாண்மையின் கோட்பாடுக்கேர்ப்ப சரியான கலைஞர்களை தேர்வு செய்தது உங்களுக்கு கை வந்த கலை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியிருக்கிறீர்கள். சுமார் பத்து வருடங்களாக இக்கருவை சுமந்து பிரசவித்த உங்கள் வேதனை எனக்கு புரிகிறது. நீங்கள் காத்திருந்தது வீண் போகவில்லை. நீங்கள் நினைத்ததற்கு மேலாக நன்றாகவே வந்திருக்கிறது. 
கதை: 
நல்ல காரியத்திற்காக உருவாக்கப்பட்ட, மனிதனின் உணர்வுகள் ஊட்டப்பட்ட  ஒரு எந்திர மனிதன், தீயவர்களின் உதவியோடு பாதை தவறி சென்றால் ஏற்படும் விளைவுகள் தான் இந்த திரைப்படம்.

நன்று:
  1. அமரர் சுஜாதாவின் வசனங்கள். அவ்வளவு அருமை. எந்திரனின் பேச்சாகட்டும், அறிவியலை நமக்கு புரிய வைப்பதாகட்டும், அவருக்கு நிகர் அவரேதான். (பெரும்பாலான வசனங்கள் அவரின் "என் இனிய இயந்திரா" மற்றும் "மீண்டும் ஜீனோ" நாவல்களில் இருந்து வந்துள்ளது)
  2. ரஜினி - அளவான நடிப்பு. தேவையான இடத்தில் நடிக்கிறார். வசன உச்சரிப்பில் கொஞ்சம் தடுமாறினாலும், மற்ற இடங்களில் சமன் படுத்தி விடுகிறார். ஆனாலும் நம்மை ஏங்க வைத்தது, நம் வில்லன் ரஜினி. தமிழ் திரையுலகம் ஒரு நல்ல வில்லனை இழந்து விட்டது. இந்த படத்தில் அறிமுகப் பாடல், பஞ்ச் வசனங்கள் இல்லாதது நிம்மதி தருகிறது. 
  3. கிராபிக்ஸ் காட்சிகள் - நம்மை இருக்கையின் நுனியில் உட்காரச் செய்கிறது. படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை நமக்கு ஆச்சரியம் அகலாமல் பார்த்துக்கொண்டது இயக்குனரின் வெற்றி என்றே சொல்லவேண்டும். தமிழ் திரையுலகில் நாம் பார்த்திராத (அல்லது நினைத்துப் பார்த்திராத) காட்சி அமைப்புகள். 
  4. படத்திற்கு ஏற்ற இசை. ரகுமானின் உழைப்பு இதில் பளிச்சிடுகிறது. இவர் பணி செய்யும் அனைத்து படங்களுக்கும் சமமான உழைப்பை கொடுப்பது அனைவரும் அறிந்ததே.
  5. சாபு சிரில் அவர்களின் களமைப்பு.
  6. ஒளிப்பதிவு - மிகவும் அருமை.
  7. சண்டை  காட்சிகள்.
நன்றல்லது:
  1. நீதிமன்ற காட்சிகள் - நம்பும்படியாக இல்லை.
  2. திணிக்கப்பட்ட பாடல்கள். வழக்கமான ஷங்கரின் திரைப்படங்களில் உள்ளது போல்.
  3. ஒரு சில இடங்களில் லாஜிக் மீறல்கள். உதாரணம் - சிட்டி ஐஸ்வர்யாவை கடத்திக்கொண்டு செல்கையில், நூறு பேர்கள் அந்த காரை நோக்கி சுடும்போதும், ஐஸ்வர்யாவுக்கு ஒன்றும் ஆகாதது.
  4. ஒரு சில இடங்களில் க்ராபிக்ஸ் காட்சிகள் சரியாக இல்லை.
தீர்ப்பு:
இந்திய சினிமாவின் ஒரு மிகப்பெரிய சாதனையை தவறாது கண்டு களியுங்கள். முக்கியமாக சவுண்ட் சிஸ்டம் அருமையாக உள்ள திரையரங்கில் பார்ப்பது மிகவும் சிறந்தது. 

கடைசியாக - அனைத்து விழாக்களிலும் அமரர் சுஜாதாவிற்கு தகுந்த மரியாதை செய்யாத, அவரை மறந்துவிட்ட நன்றிகெட்ட கூட்டத்திற்கு (கலாநிதி மாறன், சங்கர் மற்றும் ரஜினி) எனது கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Thursday, August 26, 2010

காப்பியடித்த நீதிபதிகள் - ஒரு வெட்கக்கேடு

இன்று காலை ஆந்திராவிலுள்ள வாரங்கல்லில் ஒரு கல்லூரியில் "காப்பி" அடித்ததற்காக ஐந்து பேர் மீது சட்டம் பாய்ந்துள்ளது. 

இதெல்லாம் ஒரு செய்தியா? என்று கேட்பவர்களுக்கு ஒரு செய்தி....

"காப்பி" அடித்து மாட்டிக்கொண்டவர்கள் அனைவரும் பள்ளி அல்லது கல்லூரி மாணவர்களா? இல்லை இல்லை... 

நம் நாட்டில், நீதியை நிலைநாட்டுவார்கள் என்று நாம் நம்பி, கடைசி முயற்சியாக நாம் போகும் நீதிமன்றத்தில், தீர்ப்பளிக்கும் நிலையில் உள்ள "நீதிமான்கள்!!!???" தான் அவர்கள் (மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகள்)

முதலாண்டு  LLM பரீட்சையில், அப்பட்டமாக புத்தகம் மற்றும் அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் விடைகளை எழுதிக்கொணற்ந்து, பின்பு பார்த்து பார்த்து எழுதும்போது பறக்கும் படையினர் காமிரா சகிதம் வந்து "கையும், காப்பியுமாக" பிடித்தனர். அனைவரின் கீழ்தரமும் வெளிச்சத்திற்கு வந்தது. முழுநேர செய்தி அலைவரிசைகளில் இதை அப்படியே காண்பித்தார்கள்.

இதில் மாட்டிக்கொண்ட ஒருவர் தான் காப்பியடிக்கவேயில்லை என்று சத்தியம் செய்தார் (அவர்தான் காமிராவில் முதலில் பிடிபட்டவர் என்பது நமக்கே தெரிகிறது). இதில் மாட்டிக்கொண்ட அனைவரும், அப்படி எதுவுமே நடந்திராதது போல் சிரித்துக்கொண்டே இருந்ததுதான் வெட்கக்கேடான ஒருஉண்மை.

இந்த பரீட்சையில் தேறினால், சம்பள மற்றும் பதவி உயர்வு கிட்டும் என்பதற்காக, தம்மீது நம்பிக்கை வைக்காமல், படித்துதான் பரீட்சையில் தேரவேண்டும் என்பதை மறந்து, என்ன வேண்டுமானாலும் செய்து தேறலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர்.

யார் கொடுத்தார்கள் இவ்வளவு தைரியம்? என்ன ஆனாலும் பரவாயில்லை, நம்மை யாரும் அசைக்க முடியாது என்ற தைரியமா? அல்லது, எப்படியும் நீதிமன்றத்திற்கு தானே வந்தாக வேண்டும், அங்கே நம்முடைய சக்தியை வைத்து தப்பிவிடலாம் என்கின்ற எண்ணமா?

ஒரு பானை சொத்துக்கு ஒரு சோறு பதம் என்று இதை வைத்து மற்ற அனைவரும் இப்படித்தான் என்று முடிவேடுக்கலாமா? 

முடியாது...

ஏன்?

மனிதருக்கு இது பொருந்தாது. அதனால் மற்றவர் அனைவரையும் விட்டு விடுவோம்.

யார் மீது தவறு? இவர்களையெல்லாம் இந்த ஒரு மேன்மையான நாற்காலியில் உட்கார வைத்தது யார்? 

திறமை வேண்டாம். இத்தனை வருடங்கள் ஒரு பதவியில் இருந்தால் மட்டுமே போதும், அனைவருக்கும் பதவி உயர்வு என்று சொல்லும் நமது அரசு சட்ட திட்டங்களா?..... இருக்கலாம்!

ஒரு  நாளைக்கு சுமார் பதினெட்டு மணி நேரம் உழைத்து, திறமையை வெளிக்காட்டி, சில நூறு ருபாய் சம்பள உயர்வு பெறுகின்றனர் நம்மிடையே இருக்கும் தனியார் ஊழியர்கள். ஆனால் இங்கே? நோகாமல், படிக்காமல்,ஏமாற்ற மட்டுமே தெரிந்தால் போதும். முன்னேறலாம் என்று நம்புகின்றனர்.

ஒரு நாளைக்கு சுமார் ஐந்து மணி நேரம் மட்டுமே உழைக்கும் இவர்களுக்கு மீதமுள்ள நேரத்தில் படித்தால் என்ன கேடு வந்துவிடுகிறது என்று தெரியவில்லை.

"தெரிந்தது  கையளவு, தெரியாதது கடலளவு" என்பதுபோல, இன்னும் எத்தனை பேர் உள்ளனரோ?

பிடிபடும் வரை அனைவரும் நல்லவர்கள் தானே...

இவர்கள் சற்றும் திருந்தப்போவது இல்லை. இன்னும் சில நாட்கள் கழித்து, "எப்படியாவது" மீண்டு(ம்) பதவியில் அமர்வார்கள். தீர்ப்பு சொல்வார்கள். இவர்களே மற்றவரை திருடர்கள் என்பார்கள். சொல்ல முடியாது, இன்னுமொரு காப்பியடித்த வழக்கிற்கு இவர்களே நீதிபதிகளாகக் கூட ஆகலாம். பள்ளித் தேர்வில் தவறினால் தற்கொலை செய்துகொள்ளும்  மானமுள்ள  மாணவர்கள் வாழும் இந்த "தேசத்தில்" இதுவும் நடக்கும்.

Tuesday, August 24, 2010

நான் மகான் அல்ல - திரை விமர்சனம்


மிகுந்த நாட்கள் கழித்து ஒரு நல்ல திரைப்படம் பார்த்த திருப்தி.

கதை:
தனது தாய், தந்தை (ஜெயபிரகாஷ்) மற்றும் தங்கை (ப்ரியா), இவர்களோடு வாழும் ஒரு நடுத்தர வர்க்கத்து கவலையில்லா மனிதன் ஜீவா (கார்த்திக்). நம் வழக்கமான கதாநாயகன் போல் வேலையில்லாமல் இருக்கிறார். நண்பியின் திருமண விழாவில் கலந்துகொள்ளும் இவருக்கும் ப்ரியாவிற்க்கும்  (காஜல் அகர்வால்) கண்டதும் காதல் பூக்கிறது. இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். காதலியின் வேண்டுகோளின் பேரில் வேலைக்கு சேருகிறார் ஜீவா. இதற்கிடையில், கால் டாக்சி ஓட்டுனராக இருக்கும் அவர் தந்தை, ஒரு கொலைக்கு சாட்சி சொல்லப் போக, அவரை அந்த கொலை கும்பல் கொன்று விடுகிறது. அந்த கொலைக் கும்பலை ஜீவா தேடி சென்று பழிவாங்குகிறார்.

நன்று:
  1. இயக்கம் - குறை சொல்ல முடியாத ஒரு நல்ல படைப்பு. இயக்குனர் சுசீந்தரனுக்கு பாராட்டுக்கள். நாம் எதிர்பார்க்கும் காட்சிகள் எங்கேயும் வரவில்லை. 
  2. காஜல் அகர்வால் - சில இடங்களிலேயே வந்தாலும் நிறைவாகச் செய்திருக்கிறார். வழக்கமான கதாநாயகி போல் ஆடிப்பாடிவிட்டு செல்லாமல், காதலன் வேலைக்குச் செல்ல காரணமாக இருக்கிறார். நன்றாக நடிக்கிறார். முக்கியமாக, ஒரு பாடல் காட்சியில், தந்தையுடன் செல்லும்போது காதலன் திடீரென வர, அவர் அவர் முகத்தில் தோன்றும் மாறுதல்கள், மிகவும் அருமை. கண்களால் கவி பாடுகிறார். நல்ல தேர்வு.
  3. கார்த்தி - வேலையில்லாமல் சுற்றுவதாகட்டும், காதலிப்பதாகட்டும், தந்தை மறைவிற்கு வருந்துவதாகட்டும், சண்டை காட்சிகளாகட்டும், அனைத்திலும் அருமை. சில இடங்களில் (பெண் கேட்க செல்லும் போது) மௌன ராகம் கார்த்திக் நமக்கு நினைவுக்கு வருகிறார்.
  4. யுவனின் இசை - தாளம் போட வைக்கும் பாடல்கள். "இறகை போலே" பாடல் நம் உதட்டில் ஒட்டிகொள்கிறது. பின்னணி இசையும் அருமையாகச் செய்திருக்கிறார். பாராட்டுக்கள். 
  5. ஜீவாவின் நண்பன் (சூரி), ஜீவாவின் தந்தை, இவர்கள் இருவரும் சரியான தேர்வு. நன்றாக நடிக்கிறார்கள். சூரிக்கு நன்றாக காமெடி வருகிறது. 
  6. அனைத்து கதாபாத்திரங்களும் கதைக்கு எதோ ஒரு வகையில் உதவுகிறார்கள். அந்த விஷயத்தில் சரியான பாத்திரதேர்வு. அநாவசியமான எந்த ஒரு கதாபாத்திரமும் சேர்க்கப்படவில்லை.
  7. வழக்கமான  சண்டை காட்சிகள் போல அல்லாமல், நாம் நிஜ வாழ்வில் காண்பதுபோல் உள்ளது அருமை. 
  8. ஒளிப்பதிவு - சென்னை அழகாக தெரிகிறது.
  9. அந்த இளைஞர்கள் ஏன் கொலைகளை செய்கிறார்கள் என்று காரணம் சொல்லாதது ஒரு சிறந்த நிவாரணம்.
  10. வசனம் - தேவையான இடத்தினில் மட்டும். அநாவசியமான வசனங்கள் இல்லை.
நன்றல்லது:
  1. புதிய நடிகர்கள் சிலர் அவ்வப்போது காமிரா பக்கம் பார்ப்பதை தவிர்த்திருக்கலாம். உதாரணமாக, ஜீவா அந்த ஸ்கெட்ச் போட்டவனை துரத்தும்போது, அவர் ஒரு இடத்தில் செய்வதறியாது காமெராவை பார்ப்பார். அதனை தவிர்த்திருக்கலாம்.
  2. ஒரு பெரிய ரவுடி சின்ன பசங்களிடம் தோற்பது நம்பமுடியவில்லை.
  3. ஜீவா அந்த ரௌடியிடம் நட்பாகும் காட்சி சற்று மிகைப்படுத்தப்பட்டது போல் உள்ளது.
  4. பின்பாதியில் சற்றே ரத்த நெடி தூக்கலாக உள்ளதுபோல் இருக்கிறது.
தீர்ப்பு:
கதாநாயகன் சூளுரைக்கவும், பஞ்ச் டயலாக் பேசவும் நிறைய வாய்ப்புகள் இருந்தாலும் அதனை தவிர்த்து, கதையை நன்றாக நடத்திச் சென்ற இயக்குநருக்காக இந்த திரைப்படத்தினை கண்டு களிக்கலாம்.

திரைப்படத்தை காணும்போதும், கண்டபின் வெளியே வந்த பின்னும் அந்த திரைப்படத்தின் பாதிப்பு நம்மை  விட்டு அகலாதது இயக்குனரின் மாபெரும் வெற்றி என்றே சொல்லவேண்டும். 

பின்குறிப்பு: 
தயவுசெய்து குழந்தைகளை இந்த திரைப்படம் பார்க்க அழைத்துப் போவதை தவிர்க்கவும்.

Sunday, August 22, 2010

இனிது இனிது - விமர்சனம்


நான்கு வருடங்கள்....
எட்டு கதாபாத்திரங்கள்...
நான்கு காதல்கள்.... அதில் இரண்டு வெற்றிபெற, ஒன்று தோல்வியுற மற்றொன்று விடை தெரியாமல் தொடருகிறது....

பிரகாஷ்ராஜின் டூயட் மூவீஸ் பிரசவித்த மற்றுமொரு நற்படைப்பு. வாழ்த்துக்கள் பிரகாஷ்ராஜ்... மீண்டும் ஒருமுறை....

கதைச்சுருக்கம்:

சித்து (ஆதித்), டைசன் (நாராயணன்), விமல் (விமல்), சங்கர் (ஷ்ரவன்), மது (ரேஷ்மி), சங்கீதா (ஜியா உமர்), அப்பு (பெனாஸ்), ஷ்ரவந்தி (சோனியா) மற்றும் சரண் ஆகியோர்கல்லூரி நண்பர்கள். அவர்களுக்குள் நான்கு வருடங்களில் நடக்கும் காதல், மோதல், நட்பு, தியாகம் இவைகளின் கலவை தான் இந்த திரைப்படம். 

யார் யாருக்கு ஜோடி, அவர்கள் அனைவரும் சேர்ந்தார்களா அல்லது பிரிந்தார்களா? என்பதை வழக்கம்போல் வெள்ளித்திரையில் கண்டு களிக்க. 

நன்று:
  1. சோனியா தவிர மற்றவர்கள் அனைவரும் புதுமுகங்கள். நடிப்பை நன்றாக வெளிப்படுத்துகிறார்கள். ஒரு கல்லூரியின் உள்ளே நுழைந்த பிரமிப்பு ஏற்படுகிறது. இதில் கவனிக்கப்படவேண்டிய இருவர்... டைசன் மற்றும் விமல். முன்னவர்க்கு நடிப்பு நன்றாக வருகிறது. பின்னவருக்கு காமெடி நன்றாக வருகிறது. இருவரையும் திரைப்படம் பார்த்த அனைவருக்கும் மிகவும் பிடித்திருக்கிறது. இந்த இருவரில் போட்டியில் வெற்றி பெறுவது டைசன் என்பது அரங்கில் கிடைத்த சான்றிதழ்.
  2. ஒளிப்பதிவு. மிகவும் அருமை. கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. கே.வி. குகனுக்கு பாராட்டுக்கள். அதில் முக்கியமாக கேரளாவில் உள்ள அழகு அனைத்தையும் அள்ளிக்கொண்டு வந்து நமக்கு சமர்ப்பிக்கிறார்.
  3. விரசமில்லாத் திரைக்கதை. வழக்கமாக கல்லூரி என்றாலே பலவற்றையும் காண்பிக்கும் இக்காலத்தில், இது ஒரு தைரியமான நன்முயற்சி. (பிரகாஷ்ராஜ் படம் என்றாலே இவை இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே).
  4. மது மற்றும் ஷ்ரவந்தி நம் மனதில் நிற்கிறார்கள்.நாம் அன்றாடம் காணும் கதாபாத்திரங்கள் போல் இருப்பது படத்திற்கு கூடுதல் பலம். இந்த இருவரில் வெற்றி பெறுவது ஷ்ரவந்தி. நன்றாக நடிக்கிறார், சிரிக்கிறார், உருகுகிறார். அப்புவாக வரும் பெனாஸ் கவனிக்கப்படவேண்டியவர். கான்டக்ட் லென்ஸ் பற்றி மதுவிடம் விசாரிக்கும் காட்சியில் நம்மையும் கண் கலங்க வைக்கிறார்.
  5. நேர்த்தியான மற்றும் சினிமாத்தனம் இல்லாத திரைக்கதை அமைப்பு.  கதாசிரியர்  (வழக்கமான கல்லூரி திரைப்படங்களை போல் அல்லாமல்) நமக்கு எந்த பாடமும் கற்பிக்க முற்படவில்லை என்பதே மிக ஆறுதலான விஷயம். எந்த விதமான திடீர் திருப்பங்கள் ஏதும் இல்லாமல் காலத்தோடு கதை நகர்வது முகவும் ஆறுதல்.
  6. நண்பர்களுக்குள் தியாகம், நட்பு, கோபம் மற்றும் தத்தம் பெற்றோரிடம் உள்ள பாசம் அனைத்தும் சினிமாத்தனம் இல்லாமல் சொல்லப்பட்டு இருக்கிறது.
  7. வசனங்கள்  - மிகவும் அருமை. அன்றாடம் நாம் பேசுவது போல் உள்ளது. படத்திற்கு மிகவும் உயிரூட்டுகின்றது. 
  8. வழக்கமான  கதாநாயகிகள் போலல்லாமல், அனைவருக்கும் நடிக்க சந்தர்ப்பம் கொடுத்து இருக்கிறார்கள். அவர்களும் அதனை சரிவர பயன்படுத்தி இருக்கிறார்கள்.
  9. காதலர்கள் தத்தம் காதலை தாங்கள் உணர்ந்துகொள்ளும் இடம் மிகவும் அருமை.
நன்றல்லது:
  1. கதாநாயகன் சற்றே உயரம் குறைந்த "வினய்" போல் இருக்கிறார். பாத்திரப்படைப்பு நன்றாக இருந்தாலும், ஒரு துள்ளல் அவரிடம் இல்லாதது சற்று அந்நியமாக தோன்றுகிறது. 
  2. ஒரு பாடல் தவிர மற்ற அனைத்தும் மனதில் நிற்க மறுக்கின்றன. தெலுங்கு பாடலில் தமிழ் வரிகள் அழுத்தி திணிக்கப்பட்டது போல் ஒரு அந்நியத்தன்மை தோன்றுகிறது. சில பாடல்கள் கதையின் ஓட்டத்திற்கு அல்லாமல் வந்து போகின்றன.
  3. காதலர்களுக்குள் வரும் ஊடல் காட்சிகள் "குஷி" திரைப்படத்தை நினைவூட்டுகின்றன.
  4. "பால்பாண்டி" கதாபாத்திரம், திணிக்கப்பட்ட சினிமாத்தனம். இதே போன்று ஒரு கதாபாத்திரத்தை தெலுங்கு படைப்பில் மிகவும் அழகாக கையாண்டு இருக்கிறார்கள். தமிழில் அதனை தவறவிட்டது, இத்திரைப்படத்திற்கு எதிர்மறை விளைவைத் தருகிறது.
  5. பின்பாதி சற்று இழுவையாக இருப்பதை தவிர்த்திருக்கலாம்.
தீர்ப்பு:
ஆங்காங்கே சில குறைகள் தென்பட்டாலும்...

நல்ல கதையம்சம், போலித்தனம் இல்லாத உயிரோட்டமான பாத்திரப்படைப்பு, சிறந்த ஒளிப்பதிவு, புதுமுகங்கள் தரும் புத்துணர்வு என்பன போன்ற பல நிறைகளுக்காக குடும்பத்துடன் எத்தனை முறை வேண்டுமானாலும் கண்டு களிக்கலாம். 

கதையை தவிர மற்ற அனைத்தையும் நம்பும் இச் சினிமா உலகில், இன்று வரை துளியும் மாறாமல் நல்ல திரைப்படங்களை தரும் பிரகாஷ்ராஜ் போன்ற தயாரிப்பளர்களை வாழ்த்தி, வரவேற்று ஊக்குவிப்போம்.

Thursday, August 19, 2010

பீனிக்ஸ் பறவை - நாம் கற்க வேண்டியது...



படிக்கும்  முன் : இந்த கட்டுரை ஒரு நிர்வாகயியல்  பார்வையில் மட்டுமே படிக்குமாறு வாசகர்களை வேண்டுகிறேன். எந்த ஒரு கட்சிக்கோ அல்லது தலைவருக்கோ  மதிப்பு கூட்டும் பொருட்டு எழுதப்படவில்லை என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்.
 ------------

இந்த முறை மட்டுமல்லாது ஒவ்வொரு முறையும் உலகிற்கு உணர்த்தியிருக்கிறார், ஜெயலலிதா ... தான் ஒரு பீனிக்ஸ் பறவை என்று.

பரந்த திறலாரைப் பாசி மேல் இட்டு,
கரந்து மறைக்கலும் ஆமோ? - நிரந்து எழுந்து
வேயின் திரண்ட தோள், வேற்கண்ணாய்! விண் இயங்கும்
ஞாயிற்றைக் கைம் மறைப்பார் இல்.
 

என்ற பழமொழி நானூறு செய்யுளுக்கேற்ற உதாரணமாக இதனை சொல்லலாம்.

எத்தனை எத்தனை விமர்சனங்கள்... கட்சியை கவனிக்காமல் கொடநாட்டில் ஓய்வெடுக்கிறார், எந்த ஒரு போராட்டத்திலும் கலந்து கொள்ளாமல் தப்பிக்கிறார், யாரையும் சந்திக்க மாட்டேங்கிறார், இப்படி செய்தால் அதிமுக காணாமல் போய்விடும் என்று ஆளும் கட்சியினர் அடித்த மணியை அனைவரும் நம்பிக்கொண்டிருக்க, இரண்டே இரண்டு கூட்டங்கள் நடத்தி ஆளும் கட்சியினரை, ஆழ்ந்த நித்திரையில் இருந்து  அலாரம் வைத்து எழுப்பி இருக்கிறார் (இவங்க character ஐ புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்களே!!!). 

திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்ததால் என்ன செய்வதென்றே புரியாமல் "உலக வரலாற்றில் முதன்முறையாக", எதிர்கட்சியை எதிர்த்து ஆளுங்கட்சி போராட்டம் நடத்தி வரலாற்றில் இடம் பிடித்திருக்கின்றனர். சொந்தமாக எதுவும் செய்ய தெரியாததால் அம்மையார் கூட்டம் நடத்திய இடங்களில் தாமும் சென்று கூட்டங்களை நடத்துகிறார்கள். ஜெயலலிதா நடத்திய கூட்டங்களில் கூடிய மக்கள் வெள்ளத்தை பார்த்த பீதியில், நமது  கலைஞர் அவர்கள், அவருக்கு என்ன சுலபமாக வருமோ அதை செய்கிறார். வேறென்ன? இலவசங்கள் தான்.... 

யார்தான் இவரை பற்றி நெகடிவ் விமரிசனங்கள் பேசவில்லை? 

நக்கீரன் - ஆளுங்கட்சியின் அருளோடு ஒரு கணக்கெடுப்பு நடத்தி, ஒவ்வொரு வாரமும் பக்கத்திற்கு பக்கம் திமுக தான் அடுத்து ஆட்சியை பிடிக்கும் என்று கூவி வருகிறது. நெற்றிக்கண் தூங்குகிறது போலும்....

தொலைக்காட்சி அலைவரிசைகள் -  சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளின் பொழுதுபோக்கு மற்றும் செய்தி அலைவரிசைகளின் ஓயாத கூப்பாடுகள்... (ம்ஹூம், என்ன முக்கினாலும் நடக்காது)

வழக்குகள் - எத்தனை எத்தனை? அவர் தவறு செய்தாரா இல்லையா என்பதை பற்றி நான் வாதாட வரவில்லை. ஆனால் இவை அனைத்தையும் சமாளிக்கும் திறனைத்தான் நான் வியக்கிறேன்.


எப்படி சாத்தியமானது இந்தநல்லதொரு தொடக்கம்?
  1. ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருந்தது - ஆளுங்கட்சியின் அவலங்களை இயன்றவரையில் ஒருமுகப்படுத்தி, கடைசியில் அவற்றை மிகப்பெரிய பாணங்களாகத் தொடுத்தது.
  2. ஊரே ஒன்று சேர்ந்து உன்னால் முடியாது என்று கூறினாலும், காது கேட்காத தவளை கிணற்றின் மீது ஏறி வந்த கதை போல -  நான்கு வருடங்களாக எல்லோராலும் , இனி அதிமுக விற்கு எதிர்காலமே இல்லை என்று கூறி வந்தாலும், அதனை பொருட்படுத்தாது, எதிர்நீச்சல் போட்டு சாதித்து காட்டியது. 
  3. தொலைநோக்கு சிந்தனை - இலவசங்களை  கொடுத்து சில காலங்களுக்கு ஏமாற்றலாம் ஆனால் அது எக்காலத்திற்கும் சரியாக வராது என்று நன்றாக தெரிந்து வைத்திருந்தது. 
  4. எவையெல்லாம்  திமுக விற்கு பலமாக இருந்தனவோ, அவை அனைத்தையும் காலம் பலவீனமாக மாற்றிக் காட்டும் என்று முன்னரே அறிந்திருந்தது.
  5. பணத்தின் மீது நம்பிக்கை வைத்த அரசியல் சாணக்கியர்களின் மத்தியில், தன் திறமை மீதும், மக்கள் மீதும் மட்டுமே நம்பிக்கை வைத்தது.
  6. ஒரு  தலைவனுக்குண்டான அனைத்து தகுதிகளையும் மெருகேற்றிக் கொண்டது.
உலகத்தின் எந்த ஒரு சுய முன்னேற்ற நூல்களை எடுத்துக்கொண்டாலும், அவை, மேற்கூறியது போன்ற இந்த தகுதிகளைத்தான் முன்னிறுத்திக் கூறுகின்றன.

அம்மையாருக்கு ஒரு வேண்டுகோள் : 
  1. மக்களுக்கு உங்கள் மேல் அபார நம்பிக்கை உள்ளது. அதனை சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும். 
  2. முன்னர் நடந்தது போல் அல்லாமல் இந்த முறையாவது மக்கள் விரும்பும்படி ஆட்சி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். யாரையும் பழி வாங்கும் நோக்கமில்லாமல், மக்கள் நலனை மட்டுமே மனதில் கொள்ளவேண்டும்.  
  3. அதிமுக வின் ஊழல் அடிவருடிகளை தங்களிடம்  அண்டவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
  4. மிகவும் முக்கியமாக தங்கள் சொந்தங்களை (அல்லது தோழியின் சொந்தங்களை) கட்சியில் இருந்து தள்ளியே வைக்கவேண்டும்.

Monday, August 16, 2010

சினிமா விமர்சனம் - காதல் சொல்ல வந்தேன்...


கதை
நமது கதாநாயகன் "நானு பிரபு" (Balaji) வேதியியல் முதலாம் ஆண்டு மாணவன். அவன் படிக்கும் அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவியான "சந்தியா"வை (Meghna) பார்த்த முதற்கொண்டே காதலிக்கிறார். அவனின் குணங்களை கண்டு சந்தியாவிற்கும் அவனை பிடிக்கிறது. இருவரும் பழகத் தொடங்குகிறார்கள். அவன் தன் காதலை அவளிடம் சொல்லும் முன்னரே, அவள், அவனிடம் ஒரு சகோதர நேசத்துடன் மட்டும் தான் பழகுவதாக சொல்லிவிடுகிறாள். அவன் அதை எற்றுக்கொண்டானா? இருவரும் இணைந்தார்களா? என்பதை வெள்ளித்திரையில் கண்டு தெரிந்துகொள்க....

நன்று
  1. நம்  கதாநாயகனான பாலாஜி. நன்றாக நடிக்க வருகிறது இவருக்கு. தமிழ் திரைப்பட உலகிற்கு இன்னுமொரு திறமையான வரவு.
  2. கதாநாயகி - சரியான தேர்வு. பக்கத்து வீட்டு அக்க போல் இருக்கிறார். மற்ற கதாநாயகிகளைப்போல் சும்மா வந்து செல்லாமல், தனது நடிப்பால் கதையின் உயிரோட்டத்திற்கு நன்றாக உதவுகிறார்.
  3. யுவனின் இசை - நம்மை தாலாட்டுகிறது. அனைத்து பாடல்களும் அருமை. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.
  4. பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் - நன்றாக இருக்கிறது. 
  5. கதாநாயகனின் தோழனாக வரும் அந்த பொடியனுக்கு (Sabesh Bobby) நன்றாக காமெடி வருகிறது. பல இடங்களில் நம்ம சிரிக்க வைத்தாலும் சில இடங்களில் நம்மை தமது நடிப்பால் அழவும் வைக்கிறார்.
  6. ஒளிப்பதிவு (Rana) - அருமை. திருச்சி, இவர் காமிரா வழியே மிகவும் அழகாகத் தெரிகிறது. 
நன்றல்லது
  1. நமது கதாநாயகன, முகபாவங்களிலும், நடிப்பிர்க்கேற்ற உடலசைவிலும் இன்னும் மெருகேற வேண்டும்.
  2. திணிக்கப்பட்ட  பாடல் (சாமி வருகுது). முழுவதும் ஒரு சொல்லவொண்ணா செயற்கைத்தனம்.
  3. எடிட்டிங் - முகவும் சொதப்பி இருக்கிறார்கள். பல இடங்களில் கட்சிகள் முடிந்தவுடன் அவற்றை வெட்டாமல் சில வினாடிகள் நீண்டு இருப்பது எரிச்சலை தருகிறது.
  4. நீளமான பின்பாதி.
  5. முன்னர் வந்த திரைப்படங்களை நினைவூட்டும் சில காட்சிகள்.
  6. சில இடங்களில் ஏன் என்றே தெரியாமல் காட்சிகளை வைத்து இருப்பது. உதாரணமாக அந்த லாட்ஜ் காட்சி. கதாநாயகனுக்கு புத்தி வருவதற்கு இப்படியெல்லாமா செய்வது?. சினிமாத்தனம்..
  7. கடைசிக்  காட்சியில் சினிமாத்தனம் சற்றே தூக்கலாக இருப்பதால் அதனால் நம் மனதில் எந்த விதமான உணர்ச்சியும் ஏற்படவில்லை.
தீர்ப்பு:

நாம் தினமும் பார்க்கும் சக மனிதர்களைப் போல் கதாபாத்திரங்கள், புதுமுகங்களின் நடிப்பு, யாரையும் புண்படுத்தாமல் வயிற்றை மட்டும் புண்படுத்தும் காமெடி காட்சிகள், சண்டை காட்சிகளையும் கவர்ச்சியையும் நம் இயக்குனர் நம்பாது கதையை மட்டுமே நம்பியது, இந்த படத்திற்கு நல்லதொரு பெயரை பெற்று தருகிறது. 

இப்படிப்பட்ட முயற்சிகளுக்கு ஒரு உந்துதல் தருவதற்காகவும், நல்ல கதையமைப்பிற்காகவும் இந்த திரைப்படத்தை குடும்பத்துடன் சென்று கண்டு களிக்கலாம்.


தில்லாலங்கடி – என் பார்வையில்…


சன் டிவி தயாரித்து , நம்ம இளைய தளபதி தொடங்கி வச்சாருன்னு தெரிஞ்சும் “தில்லாலங்கடி” படத்த போய் பார்த்தது என் தப்புதான். நம்ம சனீஸ்வரன் இரட்டை வேடத்துல ( சன் & இளைய தளபதி) போய் அந்த படத்துக்கு அவரால முடிஞ்சத எல்லாம் பண்ணியிருக்கிறார். என்ன நடக்குதுன்னே தெரியல…
 
கதை :
தனக்கு அல்லது தன்னைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றிலும் ஒரு கிக் வேண்டும் என்று நினைப்பவன் நமது கதாநாயகன் (ஜெயம் ரவி). ஒரு காதல் திருமணத்தில் சந்திக்கும் ரவியும் தமன்னாவும் சில பல செல்லச் சீண்டல்களுக்குப்பின் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்குகிறார்கள். எதில் மயங்கி ரவியை தமன்னா காதலித்தாரோ, அதுவே அவர்களின் பிரிவினைக்கு காரணியாகிறது.  தமன்னா பின்னர் மலேசியா திரும்புகிறார். சிறிது காலத்துக்குப் பின் தன்னை பெண் பார்க்க வரும் ஷ்யாமிடம் மேற்கண்ட தனது காதல் அனுபவத்தை சொல்கிறார். ஷாமும் தான் ஒரு திருடனை பற்றியும் தான் அவனை பிடிக்கத்தான் மலேசியா வந்திருப்பதாக சொல்கிறார். நாம் நினைத்தது போலவே இருவரும் ரவியை பற்றித்தான் பேசுகிறார்கள்.
பலப்பல திருப்பங்களுக்கு (என்ன என்ன என்பதை வெள்ளித்திரையில் காண்க) பின்னர் இருவரும் தாம் தேடி வந்தவரை கண்டுபிடிக்கிறார்கள். தமன்னா ரவியுடன் இணைந்தாரா?, ஷாம் திருடனை என்ன செய்தார்? மற்றும் ரவி ஏன் திருடன் ஆனான்? என்பதை வெள்ளித்திரையில் கண்டு தெரிந்து கொள்ளுங்கள்.

நன்று:
  1. ரவியின் புதிய பரிமாணம். அவருக்கு நன்றாக காமெடி வருகிறது. வடிவேலுக்கு சரிநிகர் சமானமாக ஈடு கொடுக்கிறார். ரஜினி மற்றும் விஜயை தொடர்ந்து ரவியும் “கதானாயகக் காமெடியனாக” ஆகலாம்.
  2. சந்தானம் வரும் நேரம் எல்லாம் சிரிப்பு மழை. முக்கியமாக அவர் “Brain Scan report” ஐ வஞ்சிரம் மீன் வருவலுக்கு ஒப்பிடுவது ஒரு சிறந்த உதாரணம்.
  3. நம்ம வடிவேலு. சில இடங்களில் அவர் செய்வது வக்கிரமாக இருந்தாலும் மனிதர் கலக்கோ கலக்கென்று கலக்குகிறார். உங்கள் பயணம் தொடரட்டும்.
  4. யுவனின் இசை.
  5. ஷாமின் வித்தியாசமான வேடம். அவருக்கு இந்த மாதிரி வேடம் நன்றாக பொருந்துகிறது என்றே சொல்லலாம்.
நன்றல்லது:
  1. கதாநாயகன் திருடனாக மாறுவதற்கு இயக்குனர் தரும் காரணம் வலுவுள்ளதாக இல்லை.
  2. கொலை வெறியுடன் தேடி வந்த திருடனால் ஒரே காட்சியில் ஷாம் அவனை  மன்னித்து விடுவதற்கும் வலுவான காரணம் இல்லை. என்னதான் அவன் நல்ல காரியத்திற்காக திருடுகிறான் என்று தெரிந்ததும் அவனை விட்டு விடுவது மிகைப்படுத்தப்பட்ட சினிமாத்தனம்.
  3. லாஜிக் மீறல் : எல்லா இடத்திலும் திருடிக்கொண்டிருந்த கதாநாயகன் திடீரென்று ஐபிஎஸ் அதிகாரியாக வந்து நிற்பது. முன் பாதியில் கதாநாயகனை மிகுந்த படிப்பாளியாக காண்பிப்பதை ஏற்றுக்கொண்டாலும், ஐபிஎஸ் தேர்வு முடித்த பின்னர் இரண்டு வருடம் training எடுக்காமல் திடீரென அதிகாரியாக வந்து நிற்பதும் ஏற்றுகொள்ள முடியவில்லை.
  4. லாஜிக் மீறல் : சின்ன வண்டியை வைத்துக்கொண்டு பெரிய கட்டடத்தை இடித்து உள்ளே சென்று களவாடுவதை நம்பவே முடியவில்லை.
  5. அரசியல்வாதிகளை மிகுந்த முட்டாள்களாக காட்டுவதையும் ஏற்றுகொள்ள முடியவில்லை. நம்மை முட்டாள்கள் ஆக்கும் அவர்களை அவ்வாறு பார்ப்பது சற்று வித்தியாசமாக இருக்கிறது.
  6. திடீர் திடீரென மாறும் காட்சிகள். எடிட்டிங் கில் சற்று தடுமாறி இருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
  7. திணிக்கப்பட்ட பாடல்கள்.
  8. பள்ளிக் குழந்தைகள் ஊர்வலம் செல்வது. என்ன காரணம் சொல்லி  பர்மிஷன் வாங்கியிருப்பார்கள்? இதிலும் சினிமாத்தனம்.
  9. முதல் காட்சியில் யோகா செய்யும் தமன்னாவின் உடலை சுற்றி சுற்றி காமிரா சுழல்வது நமக்கு சற்று நெளிவை உண்டாக்குகிறது.
மொத்தத்தில் மேற்கண்ட லாஜிக் ஓட்டைகளை கண்டுகொள்ளாவிட்டால் படம் பார்க்கலாம். சில காட்சிகள் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கக் கூடியதாக இல்லை என்றே சொல்லலாம்.
இதை இயக்கியவர் நம் ராஜா என்றால் நம்புவதற்கு சற்று  கடினமாக உள்ளது. அவர் முன்னர் எடுத்த திரைப்படங்களை ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை. எங்களை ஏமாற்றி விட்டீர்கள் ராஜா.

காமன்வெல்த் போட்டிகளும் சில புலம்பல்களும்….

கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு…
 
“குடிக்க கூழு இல்லை, கு***கு எதுக்குப்பா மல்லிகைப் பூவு”

மேலே சொன்ன சொலவடைக்கும் நாம் காமன்வெல்த் போட்டி நடத்துவதற்கும் எந்த ஒரு வேறுபாடும் கிடையாது.

பத்து நாள் கூத்துக்கு கிட்டத்தட்ட ருபாய்  60,000 கோடிக்கு மேல் செலவு செய்வதாக பல்வேறு முழு நேர செய்தி அலைவரிசைகள் சென்ற வாரம் முழுவதும் கூவி வந்துள்ளன.

யாருக்காக இவை அனைத்தும்?

இந்த போட்டிகள் நடத்துவதால் நமக்கோ அல்லது நம் நாட்டிற்கோ ஏதாவது பயனுண்டா?

சற்றே திரும்பி பார்ப்போமா?

2003 ஆம் ஆண்டு இந்திய ஒலிம்பிக் சங்கம் பிரதமரிடம் வைத்த வேண்டுகோளின் பேரில் அப்போது நமது பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்கள் ருபாய் 150 கோடி செலவில் இந்த போட்டிகள் நடத்த ஒப்புதல் அளித்தார் . வேண்டுகோளின் உள்ளடக்கம் என்னவென்றால், ருபாய் 150 கோடி மக்கள் பணத்திலிருந்து கடனாக கொடுக்குமாறும், போட்டிகள் முடிந்த பின்னர் அதனால் வரும் வருமானத்தில் (விளம்பரங்கள், விளம்பரதாரர்கள் மற்றும் நுழைவுக் கட்டணம் வாயிலாக) அதை திருப்பி செலுத்த வேண்டும். அப்போது அளித்த ஒப்புதலில், உள் கட்டமைப்புகளுக்கு (Infrastructure) எந்த விதமான நிதி ஒதுக்கீடும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இதற்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு காமன்வெல்த் நாடுகளுக்கும் தத்தம் வீரர்கள் பயிற்சிக்காக தலா ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் தருவதாக வாஜ்பாய் அவர்கள் ஒப்புக்கொண்டார்.

ஆனால் இப்போதோ தொடக்க மற்றும் முடிவு நாட்களுக்கு மட்டுமே ருபாய் 400 கோடி தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. நமது அரசு மற்றும் அரசியல்வாதிகளின் மெத்தனதினால் இது மேன்மேலும் வளர்ந்து ருபாய் 1,600 கோடி தேவையென கணக்கிடப்பட்டது (பல வருடங்களின் பணவீக்கம் காரணமாக). தற்போது ருபாய் 60,000 கோடி யாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது (அனைத்து செய்தி அலைவரிசைகளின் தகவல் சரி எனும் பட்சத்தில்).

ஆட்சிகள் மாறியும் காட்சிகள் மாறவில்லை. ஒவ்வொரு முறையும் இந்த திட்டங்களின் தேவைக்காக என்ன ஏது என்று கேட்காமலேயே நிதி ஒடுக்கப்பட்டு வந்துள்ளது.

எதற்காக இவை அனைத்தும்…. வறட்டு கவுரவம். நாட்டின் பெருமையை பறைசாற்ற இதைவிட வேறு வழியே இல்லையா என்ன?

4 கோடி ருபாய் செலவு செய்து பயிற்சி எடுத்துக்கொண்ட நமது அபினவ் பிந்த்ரா ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வாங்கவில்லையா? இந்த 60,000 கோடி ரூபாயை நமது விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக செலவிட்டு இருந்தால் எவ்வளவோ தங்க பதக்கங்கள் வாங்கியிருக்கலாமே. ஒவ்வொரு கிராமத்திலும் அல்லது மாவட்டத்திலும் வெறும் பெயர்பலகைகளில்  மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கும் “விளையாட்டு பேரவைகளை (Sports Federation)” மேம்படுத்துவதில் முதலீடு செய்து இருந்தால் இன்று அமெரிக்காவுக்கு நிகராகவோ  அல்லது அதற்கும் மேலாகவோ வெற்றியாளர்கள் நமக்கு கிடைத்து இருக்க மாட்டார்களா?

தற்போது மேல்தட்டு மக்கள் வசித்து வரும் பகுதிகளில் இந்த விளையாட்டின் பேரில் நடைபெற்றுவரும் உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் பணிகளை அடித்தட்டு மக்கள் வசித்துவரும் பகுதிகளில் செய்தால் அந்த மக்களுக்கும் ஒரு விமோசனம் கிடைக்கும் அல்லவா. பசிக்கு உணவு தருவதும் ருசிக்கு உணவு தருவதும் வேறு வேறு அல்லவா? இதெல்லாம் நமது நாட்டின் வறுமையை மறைக்கவா? நமது நாட்டிற்கு வரும் விளையாட்டு வீரர்கள் மேல் தட்டு மக்களை மட்டுமே  பார்த்துவிட்டு  “இந்தியா எவ்வளவு முன்னேறியிருக்கிறது” என்று மலைப்பார்கள் என்ற எண்ணமோ? சாக்கடையை சுத்தப்படுத்தாமல் மேலே மட்டும் மூடிவிட்டு வாசனைக்காக பன்னீர் தெளிப்பது போல் உள்ளது. என்றாவது ஒரு நாள் உண்மையான காட்சி வெளியே தெரியும் என்று தோன்றவில்லையா?

ஐ.நா சபை ஆண்டுதோறும் வெளியிடும் “UN Development Index” ல் நாம் கடந்த 15 வருடங்களாக தரவரிசை பட்டியலில் 134ஆம் இடத்தையே தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம்.  இதை மேம்படுத்த ஏதாவது செய்திருக்கலாமே?

இந்த பணத்தில் ஒரு சிறிய பகுதியை போபால் விஷவாயு தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்திற்கு நிதியாக கொடுத்து இருந்தால் அந்த உள்ளங்கள் நம்மை வாழ்த்தியிருக்காதோ?

அதெல்லாம் சரி. இந்த நாட்டு நலனுக்காக இவை அனைத்தையும் நமது மரியாதைக்குரிய அரசியல்வாதிகள் செய்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம். “செய்வனத் திருந்தச் செய்” என்கின்ற பழமொழிக்கு ஏற்றாற்போல் சரியாக செய்தார்களா என்றால் அதுதான் இல்லை. ஒரு நாள் மழைக்கே ஒழுகிய அரங்கங்கள், பயிற்சியின் பொது, சரியாக பதிக்காத கற்களால் காயமடைந்த வீரர், வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கு டில்லியில் உள்ள அனைத்து கல்லூரி விடுதிகளில் இருந்து மாணவர்கள் வெளியேற்றம் (வெளியேற்றப்பட்ட  மாணவர்கள் செய்வதறியாது விழித்துக்கொண்டிருந்தது என் கண் முன்னே இன்னமும் நிழலாடுகிறது) என எத்தனை குறைபாடுகள். தெரிந்தது கடுகளவு, தெரியாதது மலையளவு என்றே சொல்லலாம்.

மேலும் இந்த போட்டிகளில் கலந்து கொள்ள இருந்த  மேல்நாட்டு விளையாட்டு வீரர்களான Hoy (Olympic Gold Medalist – Quadrapule), Usain Bolt (Olympic Gold medalist) போன்ற சர்வதேச புகழ் பெற்ற விளையாட்டு வீரர்கள் தாங்கள் இப்போது வர இயலாது என்று தெரிவித்து உள்ளார்கள். இந்த முடிவு விளையாட்டு விளம்பரங்களுக்கு மேலும் பின்னடைவை தந்துள்ளது.

இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும், இந்த விளையாட்டுகள் நடக்கும் பத்து நாட்களுக்கு ரஷ்யாவிலிருந்து ருபாய் 40 கோடி செலவில் ஒரு பலூன் ஒன்று வாடகைக்கு எடுக்க போகிறார்களாம். என்ன கொடுமை சார் இது. (இந்த பதிவின் தொடக்கத்தில் உள்ள சொலவடையை மீண்டும் ஒருமுறை படித்துக்கொள்ளவும்).

விளையாட்டு வீரர்களுக்கு என பிரத்யேக மேம்பாலங்கள், கொடிகளை வாரி இறைத்து துவக்க நாள் மற்றும் முடிவு நாள் நிகழ்ச்சிகள் (5  கோடிக்கு ஏ.ஆர். ரகுமானிடம் பாடல் ஒன்று இசையமைத்து  தரச் சொன்னதாக கேள்வி) என்று உலகமே மறக்க முடியாத அளவுக்கு நாங்கள் செய்து காட்டுகிறோம் என்று கமிட்டியினர் மார்தட்டிச் சொன்னாலும், இன்னும் பெரிய அளவில் விளம்பரதாரர் கிடைத்தபாடில்லை.அவ்வாறு யாரும் கிடைக்காத பட்சத்தில் இந்த செலவு அனைத்தும் யார் தலையில் விடியும் தெரியுமா? இரவு பகல் பார்க்காமல், வியர்வை வழிய, உடல் வருத்தி நாம் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை நாட்டு நலனுக்காக வருமான வரி என்ற பெயரில் வருடா வருடம் கட்டுகிறோம் அல்லவா? அதில்தான்…

“மறக்க முடியாத அளவுக்கு” என்று அவர்கள் சொன்னதை “நல்ல நிகழ்வுகளாக ” நினைவில் நிற்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வோம்.

இப்படி செலவு செய்வதை விட்டுவிட்டு, ஒரு சராசரி இந்திய குழந்தைக்கு உண்ண உணவு, அடிப்படை கல்வி மற்றும் விளையாட்டு பயிற்சிக்கு மைதானமும் நல்ல பயிற்சியாளர்களும் ஏற்படுத்தித் தராத பட்சத்தில் விளையாட்டு உலகத்திலும் “மாவோயிஸ்டுகள்” தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Inception – கனவுலகப் பயணங்கள்

படிக்கும் முன்….
இந்த படத்தை பற்றி நன்கு தெரிந்தவர்கள் பின்வரும் விமர்சனம் படிப்பதோடு நிறுத்திக்கொள்ளவும். படம் யாருக்கெல்லாம் புரியவில்லையோ, அவர்கள் விமர்சனத்தின் கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்திகளையும் படிக்கவும்.

விமர்சனம்
நமது கதானாயகனானவன் (Leonardo DiCaprio) தனது சொந்த நாட்டில் தேடப்பட்டுவரும் ஒரு குற்றவாளி (தன் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக). அவனுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு.
அவனிடம் உள்ள ஒரு சிறு கருவியால், இன்னொருவரின் கனவுக்குள் நுழைந்து ஒரு சில எண்ணங்களை விதைத்து, தனக்கோ அல்லது வேறு ஒருவர்க்கு சாதகமாக முடிவெடுக்கச் செய்யமுடியும். இந்த திறமையை பயன்படுத்தி பெரிய மனிதர்களுக்கு உதவி செய்து கொடுத்து பின்னர் அவர்கள் மூலமாக தன் நாட்டிற்குள் நுழைய அவன் திட்டம் தீட்டி இருந்தான்.
அப்படிப்பட்ட ஒருவர் (Ken Watanabe) அவனுக்கு கிடைக்கிறார். அவர் இரும்புத் தொழில் செய்ய விரும்புகிறார். ஆனால் ஏற்கனவே அந்த நாட்டில் மிகவும் புகழ் வாய்ந்த ஒரு நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தின் தலைவர் இறந்து விடுகிறார். அவரின் மகன் அந்த பொறுப்புக்கு வருவார் என அனைவரும் எதிர்ப்பார்கிறார்கள். அந்த வாரிசின் கனவுக்குள் நுழைந்து அவன் மறுபடியும் அந்த தொழிலை மேற்கொள்ளாதவாறு அவன் மனதை மாற்ற வேண்டும் என்பது கதானாயகனுக்கான வேலை.
அவன் அந்த வேலையை சரியாக செய்தானா? தன் நாட்டிற்கு திரும்பிச் சென்றானா? தன் குழந்தைகளுடன் மீண்டும் இணைந்தானா என்பதை வெள்ளித்திரையில் கண்டு தெரிந்து கொள்ளுங்கள்.
1999ல் வெளிவந்த Matrix திரைப்படம் போல் இதிலும் அசத்தலான சண்டை காட்சிகள் அமைந்துள்ளன.

நன்று:
  1. புவிஈர்ப்பை மிஞ்சும் சண்டை காட்சிகள்
  2. அனைத்து கதாபாத்திரங்களின் தன்மையையும் தாம் செய்யும் வேலைகளையும் அவர்கள் மற்றொருவருடன் உரையாடும்போதே நமக்கு புரிய வைத்திருப்பது.
  3. கணினித் தொகுப்புக் காட்சிகள் (Computer Graphics)
  4. அனைவரின் நடிப்பு
  5. சாத்தியமில்லாத அனைத்தையும் நாம் நம்பும்படியாக காண்பித்திருப்பது
  6. கதாபாத்திரங்களின் மனோபாவத்திற்கேற்ப அவர்களின் செய்யும் வேலையும் அமைந்திருப்பது.
நன்றல்லது :
  1. Ken Watanabe – அவரின் ஆங்கில உரையாடலில் ஜப்பானிய மொழியின் ஆதிக்கம் சற்று அதிகமாக உள்ளதால் நம்மால் அவர் பேசுவதை சரியாக தொடர முடியவில்லை.
  2. பனிச்சறுக்கு சண்டை காட்சிகள் – எடிட்டிங்கில் சற்று தடுமாறி இருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
தவிர்க்காமல் குடும்பத்துடன் பார்க்கவேண்டிய ஒரு திரைப்படம்.

மொத்தத்தில் இதனால் நம் “சூப்பர் ஹீரோக்களுக்கு” தெரிவிப்பது என்னவென்றால்…..
  1. பைக் அல்லது கார் ஒட்டிக்கொண்டே கண்டம் விட்டு கண்டம் தாவுவது.
  2. ஒரு சிறு கத்தியால் வானூர்தியை அறுப்பது
  3. ஒரே ஆளாக ஐம்பது / அறுபது பேரை அடித்து சாய்ப்பது
  4. அருவாளை தூக்கிகொண்டு ஊர் ஊராக கொலை வெறியுடன் அலைவது
  5. கதாநாயகியின் தொப்புளில் ஆபரேஷன் தவிர மற்ற அனைத்தையும் செய்வது
  6. காதலுக்காக கண்டதையும் வெட்டிக்கொல்வது
  7. ஒரே பாடலில் பணக்காரனாவது
மேற்கண்ட அனைத்தையும் விட்டுவிட்டு, இந்த திரைப்படம் போன்று நல்லதொரு படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும்.

படத்தை பார்த்தும் புரியாதவர்களுக்காக……
மற்ற திரைப்படங்களை போலல்லாமல் இத்திரைப்படத்தை பார்ப்பதற்கு ஒருமுகத்தன்மை மிகவும் அத்தியாவசியமாகிறது. உங்களின் ஒரு சிறு கவனச்சிதைவு உங்களை இந்த திரைப்படத்தை ரசிக்க முடியாமல் செய்துவிடும்.
நினைவில் கொள்ளவேண்டிய சில தகவல்கள்…..
நமது கதாநாயகன் ஒரு பிரித்தேடுப்பாளர் (Extractor).
அவரின் வேலை? – ஒரு அடையாளம் காணப்பட்ட மனிதனை (Target)  தன்னை பணியமர்த்தியவரின் (Client) தேவைக்கேற்ப முடிவெடுக்க வைப்பது.
எவ்வாறு ? – தனது நண்பர்கள் மற்றும் ஒரு சிறு கருவியின் உதவியுடன் அந்த மனிதனின் கனவில் ஒரு எண்ணத்தை விதைத்து, அந்த மனிதனை தனக்கு சாதகமாக முடிவெடுக்க வைத்து , பின்னர் அவ்வாறு செயல்பட வைப்பது.
எப்படி சாத்தியம்? – இலக்கானவர் (target), பணியமர்த்தியவர் (Client) மற்றும் கீழ்கண்ட அனைவரும் அந்த கருவியின் மூலமாக கனவில் இணைந்து, திட்டமிட்டபடி செயல்பட்டு மனதை மாற்றுகிறார்கள்.
சிற்பி அல்லது கட்டிடக்கலைஞர் (Architect – Ellen Page) – கனவு நடைபெறும் இடங்களை வடிவமைப்பது.
மருந்தாளுநர் (Chemist – ) – தூக்க மருந்து தயாரிப்பவர். தேவைப்படும் கால அளவிற்கேற்ப மருந்தின் அளவு இவரால் நிர்ணயிக்கப்படும்.
ஆள்மாராட்டக்காரர் (Forger – Tom Hardy) – தேவைக்கேற்ப மற்றொருவரைப்போல் உருவம் மாறும் தன்மையுடையவர் (இது கனவில் மட்டும்).
நினைவில் இருக்கவேண்டிய சில விஷயங்கள்…
  1. Totem – இது ஒருவர் தாம் கனவுலகில் இருக்கிறோமா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள உதவும் ஒரு சிறிய பொருள். சுற்றுதல் தன்மையுடைய எந்த ஒரு பொருளாகவும் அது இருக்கலாம். அதனை சுற்றிவிட்டபின் சில மணித்துளிகள் கழித்து அது நின்றுவிட்டால், தாம் கனவுலகில் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம். இதனை நம் கதாநாயகன் வெவ்வேறு இடங்களில் பயன்படுத்துவதை காணலாம்.
  2. Kick – ஒருவரை ஆழ்ந்த நித்திரையில் இருந்து எழுப்புவதற்காக. உதாரணமாக, ஒருவர் தூங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென கீழே விழ நேர்ந்தால், அவர் தூக்கம் கலைந்து எழுந்து விடுவார். இதனை அவர்கள் அந்த படத்தில் ஒரு காட்சியில் செயல்முறை விளக்கமாக செய்து காட்டுவார்கள். மேலும், அவர்கள் கனவில் செல்லும் வாகனம் கீழே விழும்போது அனைவரின் கனவும் கலைவதும் இதனால்தான்.
  3. ஒருவர் கனவில் இறக்க நேர்ந்தால் அவரது உறக்கம் உடனே தடைப்பட்டுவிடும்.
  4. Limbo – ஒருவர் தன் கனவில் மிகவும் ஆழமாக செல்ல நேர்ந்தால் வரக்கூடியது. இது ஒரு ஆழ்நிலை உறக்கம் என்றும் சொல்லலாம்.
  5. சிற்பியானவர் உலகில் ஏற்கனவே உள்ளவைகளை கொண்டு கனவுலகை வடிவமைத்தால், அவருக்கும் மற்றவர்களுக்கும் தாம் கனவில் இருக்கிறோமா அல்லது நனவில் இருக்கிறோமா என்று வித்தியாசம் காண இயலாது.
  6. ஒருவர் மற்றொருவரின் கனவுக்குள் நுழைந்தால், அவர்களுக்கு அந்த கனவில் உள்ள மற்றவர்களால் தீங்கு நேரக்கூடும்.
இவை அனைத்தும் படம் தொடங்கி முதல் ஐம்பது நிமிடங்களில் நமக்கு இயக்குநரால் சொல்லப்பட்டு விடுகிறது....