Thursday, August 26, 2010

காப்பியடித்த நீதிபதிகள் - ஒரு வெட்கக்கேடு

இன்று காலை ஆந்திராவிலுள்ள வாரங்கல்லில் ஒரு கல்லூரியில் "காப்பி" அடித்ததற்காக ஐந்து பேர் மீது சட்டம் பாய்ந்துள்ளது. 

இதெல்லாம் ஒரு செய்தியா? என்று கேட்பவர்களுக்கு ஒரு செய்தி....

"காப்பி" அடித்து மாட்டிக்கொண்டவர்கள் அனைவரும் பள்ளி அல்லது கல்லூரி மாணவர்களா? இல்லை இல்லை... 

நம் நாட்டில், நீதியை நிலைநாட்டுவார்கள் என்று நாம் நம்பி, கடைசி முயற்சியாக நாம் போகும் நீதிமன்றத்தில், தீர்ப்பளிக்கும் நிலையில் உள்ள "நீதிமான்கள்!!!???" தான் அவர்கள் (மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகள்)

முதலாண்டு  LLM பரீட்சையில், அப்பட்டமாக புத்தகம் மற்றும் அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் விடைகளை எழுதிக்கொணற்ந்து, பின்பு பார்த்து பார்த்து எழுதும்போது பறக்கும் படையினர் காமிரா சகிதம் வந்து "கையும், காப்பியுமாக" பிடித்தனர். அனைவரின் கீழ்தரமும் வெளிச்சத்திற்கு வந்தது. முழுநேர செய்தி அலைவரிசைகளில் இதை அப்படியே காண்பித்தார்கள்.

இதில் மாட்டிக்கொண்ட ஒருவர் தான் காப்பியடிக்கவேயில்லை என்று சத்தியம் செய்தார் (அவர்தான் காமிராவில் முதலில் பிடிபட்டவர் என்பது நமக்கே தெரிகிறது). இதில் மாட்டிக்கொண்ட அனைவரும், அப்படி எதுவுமே நடந்திராதது போல் சிரித்துக்கொண்டே இருந்ததுதான் வெட்கக்கேடான ஒருஉண்மை.

இந்த பரீட்சையில் தேறினால், சம்பள மற்றும் பதவி உயர்வு கிட்டும் என்பதற்காக, தம்மீது நம்பிக்கை வைக்காமல், படித்துதான் பரீட்சையில் தேரவேண்டும் என்பதை மறந்து, என்ன வேண்டுமானாலும் செய்து தேறலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர்.

யார் கொடுத்தார்கள் இவ்வளவு தைரியம்? என்ன ஆனாலும் பரவாயில்லை, நம்மை யாரும் அசைக்க முடியாது என்ற தைரியமா? அல்லது, எப்படியும் நீதிமன்றத்திற்கு தானே வந்தாக வேண்டும், அங்கே நம்முடைய சக்தியை வைத்து தப்பிவிடலாம் என்கின்ற எண்ணமா?

ஒரு பானை சொத்துக்கு ஒரு சோறு பதம் என்று இதை வைத்து மற்ற அனைவரும் இப்படித்தான் என்று முடிவேடுக்கலாமா? 

முடியாது...

ஏன்?

மனிதருக்கு இது பொருந்தாது. அதனால் மற்றவர் அனைவரையும் விட்டு விடுவோம்.

யார் மீது தவறு? இவர்களையெல்லாம் இந்த ஒரு மேன்மையான நாற்காலியில் உட்கார வைத்தது யார்? 

திறமை வேண்டாம். இத்தனை வருடங்கள் ஒரு பதவியில் இருந்தால் மட்டுமே போதும், அனைவருக்கும் பதவி உயர்வு என்று சொல்லும் நமது அரசு சட்ட திட்டங்களா?..... இருக்கலாம்!

ஒரு  நாளைக்கு சுமார் பதினெட்டு மணி நேரம் உழைத்து, திறமையை வெளிக்காட்டி, சில நூறு ருபாய் சம்பள உயர்வு பெறுகின்றனர் நம்மிடையே இருக்கும் தனியார் ஊழியர்கள். ஆனால் இங்கே? நோகாமல், படிக்காமல்,ஏமாற்ற மட்டுமே தெரிந்தால் போதும். முன்னேறலாம் என்று நம்புகின்றனர்.

ஒரு நாளைக்கு சுமார் ஐந்து மணி நேரம் மட்டுமே உழைக்கும் இவர்களுக்கு மீதமுள்ள நேரத்தில் படித்தால் என்ன கேடு வந்துவிடுகிறது என்று தெரியவில்லை.

"தெரிந்தது  கையளவு, தெரியாதது கடலளவு" என்பதுபோல, இன்னும் எத்தனை பேர் உள்ளனரோ?

பிடிபடும் வரை அனைவரும் நல்லவர்கள் தானே...

இவர்கள் சற்றும் திருந்தப்போவது இல்லை. இன்னும் சில நாட்கள் கழித்து, "எப்படியாவது" மீண்டு(ம்) பதவியில் அமர்வார்கள். தீர்ப்பு சொல்வார்கள். இவர்களே மற்றவரை திருடர்கள் என்பார்கள். சொல்ல முடியாது, இன்னுமொரு காப்பியடித்த வழக்கிற்கு இவர்களே நீதிபதிகளாகக் கூட ஆகலாம். பள்ளித் தேர்வில் தவறினால் தற்கொலை செய்துகொள்ளும்  மானமுள்ள  மாணவர்கள் வாழும் இந்த "தேசத்தில்" இதுவும் நடக்கும்.

No comments:

Post a Comment