Tuesday, August 24, 2010

நான் மகான் அல்ல - திரை விமர்சனம்


மிகுந்த நாட்கள் கழித்து ஒரு நல்ல திரைப்படம் பார்த்த திருப்தி.

கதை:
தனது தாய், தந்தை (ஜெயபிரகாஷ்) மற்றும் தங்கை (ப்ரியா), இவர்களோடு வாழும் ஒரு நடுத்தர வர்க்கத்து கவலையில்லா மனிதன் ஜீவா (கார்த்திக்). நம் வழக்கமான கதாநாயகன் போல் வேலையில்லாமல் இருக்கிறார். நண்பியின் திருமண விழாவில் கலந்துகொள்ளும் இவருக்கும் ப்ரியாவிற்க்கும்  (காஜல் அகர்வால்) கண்டதும் காதல் பூக்கிறது. இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். காதலியின் வேண்டுகோளின் பேரில் வேலைக்கு சேருகிறார் ஜீவா. இதற்கிடையில், கால் டாக்சி ஓட்டுனராக இருக்கும் அவர் தந்தை, ஒரு கொலைக்கு சாட்சி சொல்லப் போக, அவரை அந்த கொலை கும்பல் கொன்று விடுகிறது. அந்த கொலைக் கும்பலை ஜீவா தேடி சென்று பழிவாங்குகிறார்.

நன்று:
  1. இயக்கம் - குறை சொல்ல முடியாத ஒரு நல்ல படைப்பு. இயக்குனர் சுசீந்தரனுக்கு பாராட்டுக்கள். நாம் எதிர்பார்க்கும் காட்சிகள் எங்கேயும் வரவில்லை. 
  2. காஜல் அகர்வால் - சில இடங்களிலேயே வந்தாலும் நிறைவாகச் செய்திருக்கிறார். வழக்கமான கதாநாயகி போல் ஆடிப்பாடிவிட்டு செல்லாமல், காதலன் வேலைக்குச் செல்ல காரணமாக இருக்கிறார். நன்றாக நடிக்கிறார். முக்கியமாக, ஒரு பாடல் காட்சியில், தந்தையுடன் செல்லும்போது காதலன் திடீரென வர, அவர் அவர் முகத்தில் தோன்றும் மாறுதல்கள், மிகவும் அருமை. கண்களால் கவி பாடுகிறார். நல்ல தேர்வு.
  3. கார்த்தி - வேலையில்லாமல் சுற்றுவதாகட்டும், காதலிப்பதாகட்டும், தந்தை மறைவிற்கு வருந்துவதாகட்டும், சண்டை காட்சிகளாகட்டும், அனைத்திலும் அருமை. சில இடங்களில் (பெண் கேட்க செல்லும் போது) மௌன ராகம் கார்த்திக் நமக்கு நினைவுக்கு வருகிறார்.
  4. யுவனின் இசை - தாளம் போட வைக்கும் பாடல்கள். "இறகை போலே" பாடல் நம் உதட்டில் ஒட்டிகொள்கிறது. பின்னணி இசையும் அருமையாகச் செய்திருக்கிறார். பாராட்டுக்கள். 
  5. ஜீவாவின் நண்பன் (சூரி), ஜீவாவின் தந்தை, இவர்கள் இருவரும் சரியான தேர்வு. நன்றாக நடிக்கிறார்கள். சூரிக்கு நன்றாக காமெடி வருகிறது. 
  6. அனைத்து கதாபாத்திரங்களும் கதைக்கு எதோ ஒரு வகையில் உதவுகிறார்கள். அந்த விஷயத்தில் சரியான பாத்திரதேர்வு. அநாவசியமான எந்த ஒரு கதாபாத்திரமும் சேர்க்கப்படவில்லை.
  7. வழக்கமான  சண்டை காட்சிகள் போல அல்லாமல், நாம் நிஜ வாழ்வில் காண்பதுபோல் உள்ளது அருமை. 
  8. ஒளிப்பதிவு - சென்னை அழகாக தெரிகிறது.
  9. அந்த இளைஞர்கள் ஏன் கொலைகளை செய்கிறார்கள் என்று காரணம் சொல்லாதது ஒரு சிறந்த நிவாரணம்.
  10. வசனம் - தேவையான இடத்தினில் மட்டும். அநாவசியமான வசனங்கள் இல்லை.
நன்றல்லது:
  1. புதிய நடிகர்கள் சிலர் அவ்வப்போது காமிரா பக்கம் பார்ப்பதை தவிர்த்திருக்கலாம். உதாரணமாக, ஜீவா அந்த ஸ்கெட்ச் போட்டவனை துரத்தும்போது, அவர் ஒரு இடத்தில் செய்வதறியாது காமெராவை பார்ப்பார். அதனை தவிர்த்திருக்கலாம்.
  2. ஒரு பெரிய ரவுடி சின்ன பசங்களிடம் தோற்பது நம்பமுடியவில்லை.
  3. ஜீவா அந்த ரௌடியிடம் நட்பாகும் காட்சி சற்று மிகைப்படுத்தப்பட்டது போல் உள்ளது.
  4. பின்பாதியில் சற்றே ரத்த நெடி தூக்கலாக உள்ளதுபோல் இருக்கிறது.
தீர்ப்பு:
கதாநாயகன் சூளுரைக்கவும், பஞ்ச் டயலாக் பேசவும் நிறைய வாய்ப்புகள் இருந்தாலும் அதனை தவிர்த்து, கதையை நன்றாக நடத்திச் சென்ற இயக்குநருக்காக இந்த திரைப்படத்தினை கண்டு களிக்கலாம்.

திரைப்படத்தை காணும்போதும், கண்டபின் வெளியே வந்த பின்னும் அந்த திரைப்படத்தின் பாதிப்பு நம்மை  விட்டு அகலாதது இயக்குனரின் மாபெரும் வெற்றி என்றே சொல்லவேண்டும். 

பின்குறிப்பு: 
தயவுசெய்து குழந்தைகளை இந்த திரைப்படம் பார்க்க அழைத்துப் போவதை தவிர்க்கவும்.

4 comments:

Post a Comment