Thursday, August 19, 2010

பீனிக்ஸ் பறவை - நாம் கற்க வேண்டியது...



படிக்கும்  முன் : இந்த கட்டுரை ஒரு நிர்வாகயியல்  பார்வையில் மட்டுமே படிக்குமாறு வாசகர்களை வேண்டுகிறேன். எந்த ஒரு கட்சிக்கோ அல்லது தலைவருக்கோ  மதிப்பு கூட்டும் பொருட்டு எழுதப்படவில்லை என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்.
 ------------

இந்த முறை மட்டுமல்லாது ஒவ்வொரு முறையும் உலகிற்கு உணர்த்தியிருக்கிறார், ஜெயலலிதா ... தான் ஒரு பீனிக்ஸ் பறவை என்று.

பரந்த திறலாரைப் பாசி மேல் இட்டு,
கரந்து மறைக்கலும் ஆமோ? - நிரந்து எழுந்து
வேயின் திரண்ட தோள், வேற்கண்ணாய்! விண் இயங்கும்
ஞாயிற்றைக் கைம் மறைப்பார் இல்.
 

என்ற பழமொழி நானூறு செய்யுளுக்கேற்ற உதாரணமாக இதனை சொல்லலாம்.

எத்தனை எத்தனை விமர்சனங்கள்... கட்சியை கவனிக்காமல் கொடநாட்டில் ஓய்வெடுக்கிறார், எந்த ஒரு போராட்டத்திலும் கலந்து கொள்ளாமல் தப்பிக்கிறார், யாரையும் சந்திக்க மாட்டேங்கிறார், இப்படி செய்தால் அதிமுக காணாமல் போய்விடும் என்று ஆளும் கட்சியினர் அடித்த மணியை அனைவரும் நம்பிக்கொண்டிருக்க, இரண்டே இரண்டு கூட்டங்கள் நடத்தி ஆளும் கட்சியினரை, ஆழ்ந்த நித்திரையில் இருந்து  அலாரம் வைத்து எழுப்பி இருக்கிறார் (இவங்க character ஐ புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்களே!!!). 

திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்ததால் என்ன செய்வதென்றே புரியாமல் "உலக வரலாற்றில் முதன்முறையாக", எதிர்கட்சியை எதிர்த்து ஆளுங்கட்சி போராட்டம் நடத்தி வரலாற்றில் இடம் பிடித்திருக்கின்றனர். சொந்தமாக எதுவும் செய்ய தெரியாததால் அம்மையார் கூட்டம் நடத்திய இடங்களில் தாமும் சென்று கூட்டங்களை நடத்துகிறார்கள். ஜெயலலிதா நடத்திய கூட்டங்களில் கூடிய மக்கள் வெள்ளத்தை பார்த்த பீதியில், நமது  கலைஞர் அவர்கள், அவருக்கு என்ன சுலபமாக வருமோ அதை செய்கிறார். வேறென்ன? இலவசங்கள் தான்.... 

யார்தான் இவரை பற்றி நெகடிவ் விமரிசனங்கள் பேசவில்லை? 

நக்கீரன் - ஆளுங்கட்சியின் அருளோடு ஒரு கணக்கெடுப்பு நடத்தி, ஒவ்வொரு வாரமும் பக்கத்திற்கு பக்கம் திமுக தான் அடுத்து ஆட்சியை பிடிக்கும் என்று கூவி வருகிறது. நெற்றிக்கண் தூங்குகிறது போலும்....

தொலைக்காட்சி அலைவரிசைகள் -  சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளின் பொழுதுபோக்கு மற்றும் செய்தி அலைவரிசைகளின் ஓயாத கூப்பாடுகள்... (ம்ஹூம், என்ன முக்கினாலும் நடக்காது)

வழக்குகள் - எத்தனை எத்தனை? அவர் தவறு செய்தாரா இல்லையா என்பதை பற்றி நான் வாதாட வரவில்லை. ஆனால் இவை அனைத்தையும் சமாளிக்கும் திறனைத்தான் நான் வியக்கிறேன்.


எப்படி சாத்தியமானது இந்தநல்லதொரு தொடக்கம்?
  1. ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருந்தது - ஆளுங்கட்சியின் அவலங்களை இயன்றவரையில் ஒருமுகப்படுத்தி, கடைசியில் அவற்றை மிகப்பெரிய பாணங்களாகத் தொடுத்தது.
  2. ஊரே ஒன்று சேர்ந்து உன்னால் முடியாது என்று கூறினாலும், காது கேட்காத தவளை கிணற்றின் மீது ஏறி வந்த கதை போல -  நான்கு வருடங்களாக எல்லோராலும் , இனி அதிமுக விற்கு எதிர்காலமே இல்லை என்று கூறி வந்தாலும், அதனை பொருட்படுத்தாது, எதிர்நீச்சல் போட்டு சாதித்து காட்டியது. 
  3. தொலைநோக்கு சிந்தனை - இலவசங்களை  கொடுத்து சில காலங்களுக்கு ஏமாற்றலாம் ஆனால் அது எக்காலத்திற்கும் சரியாக வராது என்று நன்றாக தெரிந்து வைத்திருந்தது. 
  4. எவையெல்லாம்  திமுக விற்கு பலமாக இருந்தனவோ, அவை அனைத்தையும் காலம் பலவீனமாக மாற்றிக் காட்டும் என்று முன்னரே அறிந்திருந்தது.
  5. பணத்தின் மீது நம்பிக்கை வைத்த அரசியல் சாணக்கியர்களின் மத்தியில், தன் திறமை மீதும், மக்கள் மீதும் மட்டுமே நம்பிக்கை வைத்தது.
  6. ஒரு  தலைவனுக்குண்டான அனைத்து தகுதிகளையும் மெருகேற்றிக் கொண்டது.
உலகத்தின் எந்த ஒரு சுய முன்னேற்ற நூல்களை எடுத்துக்கொண்டாலும், அவை, மேற்கூறியது போன்ற இந்த தகுதிகளைத்தான் முன்னிறுத்திக் கூறுகின்றன.

அம்மையாருக்கு ஒரு வேண்டுகோள் : 
  1. மக்களுக்கு உங்கள் மேல் அபார நம்பிக்கை உள்ளது. அதனை சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும். 
  2. முன்னர் நடந்தது போல் அல்லாமல் இந்த முறையாவது மக்கள் விரும்பும்படி ஆட்சி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். யாரையும் பழி வாங்கும் நோக்கமில்லாமல், மக்கள் நலனை மட்டுமே மனதில் கொள்ளவேண்டும்.  
  3. அதிமுக வின் ஊழல் அடிவருடிகளை தங்களிடம்  அண்டவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
  4. மிகவும் முக்கியமாக தங்கள் சொந்தங்களை (அல்லது தோழியின் சொந்தங்களை) கட்சியில் இருந்து தள்ளியே வைக்கவேண்டும்.

2 comments:

Anonymous said...

அம்மா இந்த முறை முதல்வராக முன்னாள் அம்மாவின் எதிர்ப்பாளரான நான் வழிமொழிகிறேன்.

கலைஞர் அவர்களுக்கு மானாட மயிலாட பார்ட் - 8 எடுக்க லொகெஷன் தேட நேரம் சரியா இருக்கு

Rajesh Krishnamoorthy said...

மக்களுக்கு நல்லது செய்யும் யாரும் முதல்வராக ஆகலாம். ஆனால் அம்மையாரும் நாளை மக்களுக்கு எதிராக மாறமாட்டார் என்பது என்ன நிச்சயம். காலம் தான் பதில் கூற வேண்டும். இப்போது தெரிவது வெறும் நம்பிக்கை மட்டுமே.

Post a Comment